நாளை மறுநாள் துவங்குகிறது சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் வரும் 4ம் தேதி அதாவது நாளை மறுநாள் திங்கட்கிழமை அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்குகிறது. தொடர்ந்து 24 நாட்கள் இது நீடிக்கும். அதாவது வருகிற 28ம் தேதி வரை கத்திரி வெயில் அடித்து வெளுக்கும். வழக்கத்தைவிடவும், அக்னி நட்சத்திரம் நாட்களில் வெயில் கொடூரமாக இருக்கும்.
ரிஸ்க்.. பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சலூன் கடைகள் திறப்பா.. தொற்று பரவும் ஆபத்து.. மக்கள் பீதி
அதிகாரப்பூர்வ சொல் இல்லை
கத்திரி வெயில் காலத்தில் வெப்பம் அதிகரிப்பது இந்த வருடம் எப்படி இருக்கும், என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், வானிலை ஆய்வு மைய அதிகாரப்பூர்வ தரவுகளில் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் என்ற வார்த்தையே கிடையாது என்ற தகவலை கூறியுள்ளனர்.
கத்திரி வெயில்
நமது முன்னோர்களின் வானியல் கணக்கின்படி, அக்னி நட்சத்திர காலம் என்பது கணக்கிடப்பட்ட ஒன்றாகும். சில நேரங்களில் சரியாக கத்திரி வெயில் காலத்தில்தான், மழை பெய்து நாட்டை குளிர்விக்கும். அக்னி நட்சத்திரம் துவங்கும், நாளன்று மழை பெய்தால், கத்திரி வெயில் முடியும் வரை, நல்ல இதமான கால சூழல் நிலவும் என்பது நாம் பார்த்து வரும் அனுபவம்.
வீட்டுக்குள் மக்கள்
இந்த வருடம், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு ஊரடங்கு பிறப்பித்து உள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் வெப்பத்தின் தாக்கம் பெரிதாக பொதுமக்களுக்கு தெரியவில்லை. ஆனால் கத்திரி வெயிலில் வீடுகளுக்குள்ளும் கடும் புழுக்கம் நிலவும் வாய்ப்பு இருக்கிறது. ஏசியை உரிய பாதுகாப்புடன் பயன்படுத்துவதும், மின் விசிறிகளும்தான், இந்த வெயிலில் இருந்து மக்களை காப்பாற்றும் சாதனங்கள்.
தமிழகத்தில் மழை
இதனிடையே, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி ஆகியவற்றால் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தேனி மாவட்டம் மஞ்சளாற்றில் 7 செ.மீ, பெரியகுளத்தில் 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதேபோன்ற நிலை நீடித்தால், கத்திரி வெப்பம் அதிகம் பாதிக்காது.