தமிழகம் வந்த மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள்.. 18+ அனைவருக்கும் மே 1 முதல் இலவச தடுப்பூசி
சென்னை: தமிழகத்தில் வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ள நிலையில், இன்று மேலும் 3 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.

தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்படும் நிலையில், வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு தொகுப்பில் இருந்து மேலும் மூன்று லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று தமிழகத்திற்கு வந்தன. அவை தேனாம்பேட்டையிலுள்ள மருந்து சேமிப்பு கிடங்கிற்குப் பத்திரமாகக் கொண்டு செல்லப்பட்டது. மத்திய அரசு இதுவரை 69.85 லட்சம் தடுப்பூசி டோஸ்களை தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.
இதுதவிர மாநில அரசுகள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து நேரடியாகத் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு 1.5 கோடி தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்யத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் வரும் மே 1ஆம் தேதி முதல் 18+ அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு கோவின் இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications