அன்று லேடியா- மோடியா? இன்று அமித்ஷாவை ஏன் சந்திக்கனும்? சீறிய எடப்பாடிக்கு அதிமுகவில் எகிறிய ஆதரவு!
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும்போதெல்லாம் சந்திக்கனும்னு என்ன அவசியம் என எடப்பாடி பழனிசாமி கேட்ட ஒற்றை கேள்விதான் அதிமுகவினரிடையே இன்றைய ஹாட் டாபிக்காக ஓடுகிறது.
தமிழகத்தில் பாஜகவை ஆதரிப்பதில் அதிமுக, திமுக இரண்டும் போட்டி போட்ட காலம் இருந்த்து. ஆனால் ஒரு கட்டத்தில் அதிமுக, திமுக இரண்டுமே பாஜக தேவையில்லாத ஆணி என்பதில் திட்டவட்டமாக இருந்தது.
திமுகவைப் பொறுத்தவரை வாஜ்பாய், அத்வானி காலம் வேற.. இப்ப இருக்கிற மோடி- அமித்ஷா காலம் வேற என்று மட்டும் சொல்லவில்லை.. கூடுதலாக திராவிட சித்தாந்தம், திராவிட மாடல் அரசு, பாஜகவின் ஒற்றை எதிரி என நேருக்கு நேர் திரும்புகிற திசையெல்லாம் மோதிக் கொண்டிருக்கிறது திமுக. ஒன்றிய அரசு தொடங்கிய ஆளுநரை நீக்குக வரை இடைவிடாமல் பாஜகவுடன் மல்லுக்கட்டுகிறது தமிழகத்தில் ஆளும் திமுக அரசு.
குஜராத் மோடியா? இந்த தமிழ்நாட்டு லேடியா? யார் சிறந்த நிர்வாகி?: ஜெயலலிதா 'பஞ்ச்' டயலாக்!
லேடியா? மோடியா?
அதிமுகவோ ஜெயலலிதா காலத்திலேயே, பாஜகவுடன் இனி எக்காலத்திலும் கூட்டணியே கிடையாது என பிரகடனம் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி களமிறக்கப்பட்டார். அப்போது பாஜகவை மிக கடுமையாக எதிர்த்தது அதிமுக. அந்த தேர்தல் களத்தில்தான் ஜெயலலிதா, மோடியா? லேடியா? என்கிற வரலாற்றுப் பதிவான கேள்வியை முன்வைத்தார்.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அதிமுகவின் தேர்தல் பிரசார கூட்டங்களில் எல்லாம், குஜராத்தையும் முதல்வராக இருந்த மோடியையும் வெளுவெளுவென வெளுத்தெடுத்தார் ஜெயலலிதா. மேலும் குஜராத் வளர்ந்துள்ளதாக கூறுவது தவறு. உணவு தானிய உற்பத்தி குஜராத்தில் 88.74 மெட்ரிக் டன் தான். ஆனால், தமிழகத்தில் 101.57 மெட்ரிக் டன். அதேபோல், மகளிருக்கான குற்றங்கள் 65 சதவிகிதம் குஜராத்தில் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் 29 சதவிகிதம் குறைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 36,996 தொழிற்சாலைகளில் அம்மாநிலத்தை விட 5 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் அதிகமாக பணிபுரிகின்றனர். இந்தியாவின் சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடி இல்லை. இந்த லேடி தான் என சீறினார் ஜெயலலிதா. அவர் மறையும்வரை இந்த நிலைமைதான் அதிமுகவின் நிலைப்பாடு என்பதாக இருந்தது.
அதிமுகவும் பாஜகவும்
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே மெல்ல மெல்ல அதிமுகவை தம் பிடிக்குள் கொண்டு வந்தது பாஜக. அதிமுகவை அப்படியே தன்வயப்படுத்திக் கொள்ள ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தின் பின்னணியில் இருந்தது பாஜக. முதல்வர் பதவியை சசிகலா ஏற்றுவிடக் கூடாது என்பதன் பின்னணியில் பாஜக இருந்தது. எடப்பாடி- ஓபிஎஸ் இணைப்பின் பின்னணியில் பாஜக இருந்தது. அதாவது பாஜகவின் கண்ணசைவில்தான் அதிமுகவின் ஒவ்வொரு மூவ்களும் இதுவரை போய்க் கொண்டிருந்தன.
பாஜகவின் தேர்தல் கணக்கு
இப்போது அந்த நிலைமை தலைகீழாக தொடங்கிவிட்டது. சசிகலா, ஓபிஎஸ், தினகரனை அதிமுகவில், அதிமுக கூட்டணியில் சேர்த்தால்தான் 2024 லோக்சபா தேர்தலில் தமக்கு ஆதாயம் என கணக்குப் போடுகிறது பாஜக. இதற்கு பெரும் முட்டுக்கட்டையாக நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஒருபோதும் ஓபிஎஸ், சசிகலா, தினகரனுன் கை கோர்க்கவே முடியாது என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் திட்டவட்டமான நிலைப்பாடு.
எடப்பாடியின் ஒற்றை கேள்வி
இதன் உச்சமாகத்தான், இன்று அமித்ஷாவை நான் ஏன் சந்திக்க வேண்டும்? என்ற எடப்பாடி பழனிசாமியின் கேள்வி. அமித்ஷா தமிழகம் வரும் போதெல்லம் சந்திக்கனும் என்கிற அவசியம் என்ன இருக்கிறது என இன்று கேள்வி எழுப்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது சென்னை முதல் டெல்லி வரை பாஜக தலைவர்களை அதிர வைத்திருக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியின் இந்த பேட்டி அதிமுகவினரை கொண்டாட வைத்திருக்கிறது.
ஜெ. பாணியில் எடப்பாடி பழனிசாமி
பாஜக சொன்னதன் பேரின் மதுரையில் பிரதமர் மோடியை ஓபிஎஸ் அருகே நின்று எடப்பாடி பழனிசாமி வரவேற்றதாக செய்திகள் வெளியாகின. இது அதிமுகவின் சீனியர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை வெறுப்பான நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. தொண்டர்களின் இந்த பல்ஸை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, இப்போது ஜெயலலிதா அன்று லேடியா? மோடியா? என கேட்டது போல, அமித்ஷாவை ஏன் சந்திக்கனும்? என எகிறி அடித்திருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினரிடையே ஆதரவு அமோகமாக பெருகிவிட்டது என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.