ஓபிஎஸ் மீது கடும் கோபத்தில் அதிமுக தொண்டர்கள்- ஜெயிக்குற நிலைமையில் எதுக்குதான் இந்த பஞ்சாயத்து?
சென்னை: தேர்தல் களத்தில் அனைவரும் ஓரணியில் ஒற்றுமையாக நின்று குழப்பமே இல்லாமல் வேட்பாளர்களை அறிவித்து களப்பணியாற்ற வேண்டிய தருணத்தில் ஓபிஎஸ் முதல்வர் வேட்பாளர் முழக்கத்தை வைத்து பெரும் குழப்பத்தை கட்சியில் ஏற்படுத்திவிட்டாரே என அதிருப்தியிலும் கோபத்திலும் இருக்கின்றனராம் அதிமுக தொண்டர்கள்.
அதிமுகவின் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது அக்கட்சி தொண்டர்கள் பெரும் குழப்பத்துடன் அவரது இல்லம் முன்பு பல்லாயிரக்கணக்கில் திரண்ட காலமும் இருந்தது. ஆனால் ஓபிஎஸ் அப்படி ஒன்றும் நம்பிக்கைக்குரிய தலைவர் இல்லை என்கிற நிலைவந்த போது அவரை திராட்டில் தொண்டர்கள் விட்ட காலமும் உண்டு.
திண்டுக்கல்லுக்கு தெற்கே சிலர்தான் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் என்கிற நிலைதான் அதிமுகவில் இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு வெளிப்படையான அதிருப்திகள் பொதுமக்களிடத்தில் இல்லை. இது அதிமுக தொண்டர்களிடத்திலும் உற்சாகத்தைதான் கொடுத்திருக்கிறது.
"கொரோனாவா" அல்லது "திமுக"வா.. எதை கண்டு அஞ்சுகிறது அதிமுக அரசு.. கிராம சபை கூட்டங்கள் ரத்து ஏன்?
அதிமுகவுக்கு சாதகம்
சில மாதங்களுக்கு முன்னர்வரை கூட தேர்தல் களம் அதிமுகவுக்கு சாதகமாக இருக்குமா? என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவை நோக்கி சாதக அலைகள் நெருங்கி வருகிறது என உளவுத்துறை தகவல்கள் சுட்டிக்காட்ட தொடங்கின. இதனால்தான் திமுகவும் பீதியுடன் தேர்தல் களத்தில் நின்று கொண்டிருந்தது.
அதிமுக தொண்டர்கள் கோபம்
இப்படியான ஒருசூழலில் எல்லாவற்றையும் சர்வ நாசம் செய்யும் வகையில் ஓபிஎஸ், திடீரென முதல்வர் வேட்பாளர் முழக்கத்தை முன்வைத்து இருக்கிறார். எட்டிப்பிடிக்கும் தூரத்தில் இருந்த அதிமுகவுக்கான வெற்றி இப்போது எட்டவே முடியாத தொலைவுக்கு ஓபிஎஸ்-ன் அதிகாரப் பசியால் ஓடிவிட்டது. இதுதான் அதிமுக தொண்டர்களின் கனத்த கோபத்துக்கு காரணமும் கூட.
கோஷ்டிகள் இல்லை
இருந்தபோதும் மாவட்ட அளவில் ஓபிஎஸ்-க்கு ஆதரவு என தனி தனி கோஷ்டிகள் எதுவும் எந்த மாவட்டத்திலும் விஸ்வரூபம் எடுக்கவில்லை. இது அதிமுக தொண்டர்களுக்கு சற்றே ஆறுதலானது. இல்லையெனில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி இரண்டாக பிளவுபட்டு தேர்தல் களத்துக்கே போகவே முடியாத அசிங்கமான சூழ்நிலை உருவாகி இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர் அதிமுக தொண்டர்கள்.
ஓபிஎஸ் எனும் தனிமரம்
ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரையில் தனக்கு, தன் மகன்களுக்கு என கட்சியில் பிளவு ஏற்படுத்துகிறார் என்பதை அதிமுக தொண்டர்கள் மிக தெளிவாக உணர்ந்து கொண்டனர். இதுவரை ஓபிஎஸ்ஸை ஜாதிய ரீதியாக தூக்கிப் பிடித்த அவரது சகாக்கள் கூட இந்த உண்மையை உணர்ந்துதான் இப்போது முதல்வர் எடப்பாடி பக்கம் நிற்கின்றனர். ஓடுகிற தண்ணீரில் மீன்களாக ஓபிஎஸ்ஸும் ஓடிக் கொண்டிருக்க வேண்டுமே தவிர எதுக்கோ ஆசைப்பட்டு எல்லாவற்றையும் இழந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம்; எல்லோரும் ஓரணியில் நின்றால்தான் வெற்றி சாத்தியம் என்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.