அதிமுகவை தாக்கிய செங்கோட்டையன் புயல்..'கொங்கு சிங்கம்' 'ஜாதி பாரா நீதிமான்'.. சிவகங்கை அதிர போஸ்டர்!
சென்னை: அண்ணா திமுகவில் பெரும் புயலை கிளப்பிவிட்டிருக்கும் முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவு குரல்கள் அதிகரித்து வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகளில் கே.ஏ.செங்கோட்டையனின் கலகக் குரலை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பல அணிகளாக சிதறி சின்னாபின்னமாகி இருப்பதால் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி இருக்கிறது; ஒருங்கிணைந்த அதிமுகவாக அதிருப்தியாளர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்பது சசிகலா உள்ளிட்டோரின் குரல். இதனையே பாஜகவும் தமது அரசியல் லாப கணக்குக்காக விரும்புகிறது.

ஆனால் சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் அதிமுகவில் அனுமதிக்கப்பட்டால் தமது எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்பதால் ஒருங்கிணைந்த அதிமுக என்ற பேச்சுக்கே கடும் எதிர்ப்பை கொட்டி வருகிறார் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், தற்போது சைலண்ட் மோடுக்கு போய்விட்டார். அவருக்கு பெரிய செல்வாக்கு எதுவும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
இந்த பின்னணியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவின் வாக்கு வங்கியின் அடித்தளமாக மேற்கு மண்டலத்தில் இருந்தே எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியும் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் குருநாதருமான கே.ஏ.செங்கோட்டையன் களமிறங்கிவிட்டார். ஒருங்கிணைந்த அதிமுகதான் தேவை என்பதில் இப்போது தாம் உறுதியாக இருப்பதாக நேற்று பொதுக் கூட்டத்திலேயே கே.ஏ.செங்கோட்டையன் ஆணித்தரமாக வலியுறுத்தினார். அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூட செங்கோட்டையன் உச்சரிக்கவில்லை.

இதனிடையே கே.ஏ.செங்கோட்டையனின் இந்த கலகக் குரலுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அதிமுகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகளில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
செங்கோட்டையனுக்கு ஆதரவான அந்த போஸ்டர்களில் இடம் பெற்றுள்ள வாசகம்: எம்ஜிஆர், ஜெயலலிதா புகழை மறைத்து தன்னை மட்டும் முன்னிலைப்படுத்த முயன்று வரும் எடப்பாடி பழனிசாமியின் எண்ணத்தை சுட்டிக்காட்டி, தன்னுடைய உரிமைக் குரலை வெளிப்படுத்திய கொங்கு நாட்டு சிங்கம், ஜாதி பாரா நீதிமான்,கோபி செட்டிபாளையத்தின் செல்லப்பிள்ளை கே.ஏ.செங்கோட்டையன், தொண்டர்களின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தியதற்காக தொண்டர்கள் சார்பாக வரவேற்கிறோம். இவன் எம்ஜிஆர்-அம்மா உண்மை விசுவாசிகள், சிவகங்கை மாவட்டம்.












Click it and Unblock the Notifications