பாஜக கொடுத்த பிளான்.. திமுக வாக்கை பிரிக்கவே அதிமுக தனித்து போட்டி.. எடப்பாடியை விளாசிய ஸ்டாலின்
சென்னை: பாஜக போட்டுக்கொடுத்த பிளான் படி, திமுக வாக்கை பிரிப்பதற்காகவே அதிமுக இந்த முறை தனித்து போட்டியிடுகிறது என்றும், கட்சியை மொத்தமாக லீசுக்கு விட்டுவிட்டு மோடியின் பீ டீமாக எடப்பாடி இருக்கிறார் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ,
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழகத்தில் அனல் பறக்க பிரச்சாரம் நடந்து வருகிறது. தங்களது வேட்பாளர்களை ஆதரித்தும் எதிர்க்கட்சியினரை விமர்சித்தும் தீவிர பரப்புரை நடந்து வருகிறது. இதிலும் குறிப்பாக ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சி அதிமுக இடையே அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் ஒருவருக்கொருவரை விமர்சித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று எடப்பாடியை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், பாஜக போட்டுக்கொடுத்த பிளான் படி, திமுக வாக்கை பிரிப்பதற்காகவே அதிமுக இந்த முறை தனித்து போட்டியிடுகிறது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் பேசியதாவது:-
விவசாயி இல்ல விஷவாயு: என்னம்மோ இந்த உலகத்தில எடப்பாடி பழனிசாமி தான் கடைசி விவசாயி மாதிரி.. தனக்கு மட்டும் தான் விவசாயத்தை பற்றி தெரியும் என்கிற மாதிரி பேசிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 3 வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகள் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போட்ட நீங்க எப்படி விவசாயி என்று சொல்வீங்க.. நீங்க விவசாயி கிடையாது விவசாயிகளை அழிக்க வந்த விஷவாயு..
இது தேவையா பழனிசாமி?: இப்போ உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்தால் தமிழகத்திற்கு என்ன லாபம் என்று கேட்கிறார். திராவிடத்தின் எதிரிகளையும், திராவிடம் என்றால் என்ன என்று தெரியாத பழனிசாமி மாதிரியான துரோகிகளையும், தினமும் இப்படி கதறவிடுராரே.. இதற்கு தான் உதயநிதி வந்திருக்கிறார். நான் இன்னும் கேட்கிறேன். கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொல்கிற அளவுக்கு பொது அறிவை வைத்துக்கொண்டு நமக்கு எல்லாம் இது தேவையா பழனிசாமி..
பாஜக கொடுத்த பிளான் படி: இந்த தேர்தலுக்கு உங்கள் பிளான் என்ன?.. பாஜக போட்டுக்கொடுத்த பிளான் படி பாஜகவுக்கு எதிரான வாக்குகளை திமுகவுக்கு வராமல் தடுப்பதற்கு நீங்க தேர்தலில் தனியா நிக்குறீங்க. உங்களால் அதிமுக வாக்குகளையும் வாங்க முடியாது இப்போ.
கட்சியின் பெயரில் திராவிடம் என்று பெயர் வைத்து விட்டு திராவிடம் னா என்னன்னு விளக்கம் சொல்ல முடியாமல் அசிங்கப்பட்டு நிற்கிறார் எடப்பாடி. என்னதான் அதிமுக எங்களது எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் திலகம் எம்ஜிஆர், நெடுஞ்செழியன், மதியழகன் போன்றோர் இருந்த கட்சி. இப்போது இந்த கட்சிக்கு பழனிசாமி வந்து வாய்த்துள்ளார்.
பாஜகவின் பீ டீம்: கட்சியை மொத்தமாக லீசுக்கு விட்டுவிட்டு மோடியின் பீ டீமாக இருக்கிறார். இதனால் தான் தமிழ்நாட்டு மக்கள் அவரை நம்ப தயாராக இல்லை. தன்னை சுற்றியிருக்கிற அத்தனை பேரையும் முதுகில் குத்திய அரசியல் அமாவாசை எடப்பாடி பழனிசாமி அவர்களே சட்டமன்ற தேர்தல் வரட்டும் அதிமுக இப்போது வெற்றி பெற்றிருக்கும் தொகுதிகளையும் திமுக பறிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications