சசிகலா விசிட்- சேலத்தில் பரபர- எம்ஜிஆர், ஜெ. சிலைகளை நெருங்க விடாமல் இபிஎஸ் கோஷ்டி போலீசில் புகார்
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர் என தம்மை தாமே அறிவித்துக் கொள்ளும் சசிகலா இன்று சேலம் பகுதிகளில் சுற்றுப் பயணம் செல்கிறார். சசிகலாவின் சேலம் பயணத்துக்கு எதிராக இபிஎஸ் கோஷ்டியினர் போலீசில் புகாரும் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் சசிகலா கோஷ்டி, ஓபிஎஸ் கோஷ்டி, இபிஎஸ் கோஷ்டி என பல கோஷ்டிகள் அடித்துக் கொண்டிருக்கின்றன. ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகள் மாறி மாறி நீதிமன்ற படிகளேறிக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம், ஓபிஎஸ் கோஷ்டி சசிகலா கோஷ்டியுடன் கை கோர்த்துக் கொண்டிருக்கிறது.
எடப்பாடி கோட்டையில்.. மாஸாக பிளான் போட்ட சசிகலா! ஆனால் இப்போதைக்கு வேண்டாம்! அவரே சொன்ன காரணம்!
புரட்சி தாயின் புரட்சி பயணம்
இந்த நிலையில் சசிகலா, அதிமுக தொண்டர்களை சந்திக்கிறேன் என தமிழகம் முழுவதும் புரட்சித் தாயின் புரட்சிப் பயணம் என்ற பெயரில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சேலம் பகுதிகளில் இந்த பயணத்தை சசிகலா நேற்று மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் மகாராணி மறைவை முன்னிட்டு தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்பட்டதால் இந்த பயணத்தை சசிகலா ஒத்திவைத்திருந்தார்.
சேலத்தில் இன்று..
இன்று தஞ்சாவூரில் இருந்து தமது பயணத்தை சசிகலா மீண்டும் தொடங்குகிறார். தஞ்சாவூர், திருவையாறு, விரகனூர் என தொடங்கும் இப்பயணம் சேலம் ஆத்தூர், வாழப்பாடி, சேலம் நான்குரோடு, சூரங்கமலம் வரை செல்கிறது. நாளை மாலை ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் இப்பயணம் முடிவடைகிறது.
எடப்பாடி கோஷ்டி
சேலம் மாவட்டம், அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம். இந்த மாவட்டத்தில் சசிகலாவின் பயணம் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக இபிஎஸ் கோஷ்டி முழுவீச்சில் தீவிரம் காட்டி வருகிறது. இபிஎஸ்-ம் சேலம் மாவட்டத்திலேயே முகாமிட்டு சசிகலாவின் பயணத்தை கவனித்து வருகிறார்.
போலீசில் புகார்
இந்நிலையில் சேலம் வருகை தரும் சசிகலா, எம்ஜிஆர்-ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்க தடை விதிக்க வேண்டும் என இபிஎஸ் கோஷ்டி போலீசுக்கு போயிருக்கிறது. அதிமுக எம்.எல்.ஏக்களான ஆத்தூர் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி மற்றும் அதிமுக நிர்வாகிகள் இந்த புகாரை கொடுத்துள்ளனர். அதிமுக எம்.எல்.ஏக்களின் புகாரின் அடிப்படையில் போலீசார் சசிகலாவுக்கு தடை விதிப்பார்களா? இந்த தடையை மீறி சசிகலா, எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிப்பாரா? என்கிற பரபரப்பு சேலத்தில் நிலவுகிறது.