இதான் கணக்கு.. தெறிக்கவிட்ட இபிஎஸ்.. தொகுதிகள் தேர்வில் நினைத்ததை சாதித்த அதிமுக.. இன்று கிளைமேக்ஸ்
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது.. இன்று தொகுதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு.. தேர்தல் பணிகளை கவனிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது. கடந்த 10 நாட்களாக இதற்காக அதிமுக கூட்டணி கட்சிகளோடு ஆலோசனைகளை செய்து வந்தது.
கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை விட்டுக்கொடுக்காமல் அதிமுக இந்த முறை மிகவும் கறாருடன் செயல்பட்டது. நடைமுறை இதுதான்.. இவ்வளவு இடங்கள்தான் கொடுக்க முடியும் என்று முதல்வர் பழனிசாமி கூட்டணி கட்சிகளிடம் மிகவும் கறார் காட்டினார்.
கறார்
தொகுதி நிலவரம், வாக்கு வங்கி அனைத்தையும் ஆராய்ந்தே கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் பழனிச்சாமி தொகுதிகளை பங்கிட்டு கொடுத்தார். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு 20 தொகுதிகளையும், பாமகவிற்கு 23 தொகுதிகளையும் அதிமுக ஒதுக்கி உள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 13 இடங்களை ஒதுக்க அதிமுக தயாராக இருந்தது.
தயார்
ஆனால் தேமுதிக 25 இடங்கள் மற்றும் ஒரு ராஜ்ய சபா இடத்தை கேட்டது. ஆனால் தேமுதிகவின் கோரிக்கையை அதிமுக ஏற்கவில்லை. என்ன நடந்தாலும் 15 இடங்களுக்கும் மேல் கொடுக்கவே முடியாது என்று முதல்வர் பழனிசாமி உறுதியாகி இருந்துவிட்டார். இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து நேற்று தேமுதிக வெளியேறியது. அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது.
எப்படி
தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் அதிமுக அதிரடியாக செயல்பட்டு நேற்றே கூட்டணி கட்சிகளை அழைத்து மீட்டிங் போட்டது. நேற்று பின்னிரவு வரை மீட்டிங் போட்டது. அதிமுக கூட்டணியில் வேறு கட்சிகளை சேர்க்க வேண்டாம், தொகுதிகளை தேர்வு செய்துவிடலாம்.. இனியும் தாமதிக்க வேண்டாம் என்று நேற்று ஆலோசனை செய்துள்ளனர்.
ஆலோசனை
அதன்படி தேமுதிகவுக்கு கொடுக்க வேண்டிய 13 தொகுதிகளை என்ன செய்வது என்றும் ஆலோசனை செய்துள்ளனர். நேற்று இரவு முழுக்க இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதை தொடர்ந்து பாமக, பாஜகவிற்கு கொடுக்க வேண்டிய 43 தொகுதிகளும் தேர்வு செய்யப்பட்டு, அந்த கட்சிகளிடம் அறிவிக்கப்பட்டது. இதற்காக பாமக முன்பே 30 தொகுதிகளை கொண்ட விருப்ப பட்டியலை கொடுத்த இருந்தது.
பட்டியல்
அதேபோல் பாஜக 25 தொகுதிகள் கொண்ட பட்டியலை கொடுத்து இருந்தது. இந்த பட்டியலில் இருந்து நேற்று அதிமுக தொகுதிகளை தேர்வு செய்துள்ளது. இதில் சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. அதிமுக தனக்கு விருப்பமாக தொகுதிகளை எடுத்துக்கொண்டு மற்ற தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அளித்துள்ளது. இதனால் பாஜக, பாமக போட்டியிடும் தொகுதிகள் இன்று காலை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதில் அதிமுக கை ஓங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
முதல்வர் அதிரடி
அதன்படி அதிமுக தான் வலுவாக இருந்த தொகுதி எதையும் விட்டுக்கொடுக்கவில்லை.. இதுதான் சரியான கணக்கு. இங்குதான் நாங்கள் போட்டியிட போகிறோம், என்று முதல்வர் பழனிச்சாமி உறுதியாக இருந்துள்ளார் கூட்டணி கட்சிகளுக்கும் இந்த தொகுதி பங்கீடு ஒத்து வந்த காரணத்தால் நேற்றே உடன்படிக்கை ஏற்பட்டு.. இன்று கிளைமேக்ஸ் வரும் என்கிறார்கள்.