அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு.. ஓபிஎஸ்க்கு மீண்டும் சிக்கல்.. இபிஎஸ்க்கு சாதகமாம்.. எப்படி?
சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்க்கும் வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கடும் பின்னடைவை சந்தித்துள்ளார். இதற்கிடையே தான் ஓ பன்னீர் செல்வத்துக்கு இன்னொரு பிரச்சனை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
Recommended Video
அதிமுகவில் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கட்சியின் விதிமுறைகள் படி பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை. இதனால் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது எனக்கூறி ஓ பன்னீர் செல்வம், வைரமுத்து சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
76வது சுதந்திர தினம்.. மதுரையில் சாதனையாளர்களுக்கு விருதுகள்..இந்தியா உலக வல்லரசாகும் என நம்பிக்கை
உயர்நீதிமன்ற தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைரமுத்து தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்கள் செய்தனர். இந்த வாதங்கள் முடிவடைந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு இன்று வெளியானது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலை தீர்ப்பு வழங்கினார். அதன்படி அதிமுகவில் ஜூலை 11ல் கூடிய பொதுக்குழு செல்லாது. பொதுக்குழுவை பொதுச்செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் சேர்ந்து கூட்ட வேண்டும். இதனால் ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவு
இதன் மூலம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின் தேர்வு செல்லாது என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால் இந்த தீர்ப்பு ஓ பன்னீர் செல்வத்துக்க சாதகமாக மாறியுள்ள நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பழனிச்சாமிக்கு கடும் பின்னடைவாக மாறியுள்ளது. இருப்பினும் இந்த வழக்கு விஷயத்தில் ஓ பன்னீர் செல்வத்துக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
தீர்ப்பு கூறுவது என்ன?
அதாவது சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் ஒருபகுதியாக 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் விரும்பி கேட்டால் 30 நாட்களில் பொதுக்குழுவை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சேர்ந்து 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கி கூட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் யாராவது பொதுக்குழு நடத்த ஒப்புதல் தர மறுத்தால் ஆணையர் நியமித்து பொதுக்குழுவை நடத்தலாம் எனவும் தீர்ப்பு கூறுகிறது.
ஓபிஎஸ்க்கு சிக்கல் ஏன்?
தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கேட்டு கொண்டதன் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் பொதுக்குழுவை கூட்டலாம் என்பதை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இது ஓ பன்னீர் செல்வத்துக்கு பாதகமாக மாறலாம். ஒரு வேளை இதற்கு ஓ பன்னீர் செல்வம் ஒப்புதல் அளிக்காவிட்டால் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவை காட்டி நீதிமன்றத்தை எடப்பாடி பழனிச்சாமி அணுகி ஆணையர் நியமனம் மூலம் பொதுக்குழுவை நடத்தி கட்சியில் தனக்கான ஆதரவை வெளிப்படுத்தலாம் எனவும், இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கைக்கொடுத்தால் அது ஓ பன்னீர் செல்வத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.