இப்ப வேண்டாம்.. வெயிட்.. சஸ்பென்சில் இருக்கும் "அந்த" 10 தொகுதிகள்.. அதிமுக அசர வைக்கும் பிளான்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 177 வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக இதுவரை வெளியிட்டுள்ள நிலையில் இன்னும் 10 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை.. இதற்கு பின் இரண்டு முக்கியமான காரணங்கள் இருப்பதாக அதிமுகவிற்கு நெருக்கமான வட்டங்கள் தெரிவிகின்றன.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக அதிமுக தற்போது ஜெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.. அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய மறுநாளே அதிரடியாக கூட்டணி கட்சி போட்டியிடும் அதிமுக இடங்களை அறிவித்தது.
அதோடு அதிமுகவின் வேட்பாளர் பட்டியலும் தற்போது வெளியாகிவிட்டது. முதல்கட்டமாக அதிமுகவில் 6 வேட்பாளர்கள் பெயர்கள் கடந்த வாரம் வெளியான நிலையில் நேற்று 171 வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது.

அமைச்சர் படைகள்
தற்போது அமைச்சர்க்களாக இருக்கும் 30 பேருக்கு மீண்டும் தேர்தலில் அதிமுக வாய்ப்பு கொடுத்து உள்ளது. அதேபோல் அதிமுக எம்எல்ஏக்களில் 41 பேருக்கு மட்டுமே இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை. மற்ற எம்எல்ஏக்கள் எல்லோரும் மீண்டும் தேர்தலில் வாய்ப்பு பெற்று உள்ளனர்.

என்னாச்சு?
அமைச்சர்கள் பாஸ்கரன், வளர்மதி, நிலோபர் கபீல் ஆகிய மூன்று பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படவில்லை. நேற்று அதிமுக தனது வேட்பாளர்களை அறிவித்த அதே சமயத்தில் இன்னொரு பக்கம் அதிமுக சார்பாக பாஜக, பாமக போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாமக 19 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

ஆனால்
அதிமுக கூட்டணியில் இதுவரை 224 தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதாவது அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எங்கு போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இன்னும் 10 தொகுதிகள் எந்த கட்சிக்கு செல்லும், இல்லை அதிமுகவே போட்டியிடுமா என்பது அறிவிக்கப்படாமல் உள்ளது. இது மட்டும் இன்னும் சஸ்பென்சாகவே இருக்கிறது.

சஸ்பென்ஸ்
பெரம்பலூர், பட்டுக்கோட்டை, திருச்சுழி, தூத்துக்குடி, பத்மநாமபுரம், கிள்ளியூர், மதுரை( மத்தி), தஞ்சாவூர், திரு.வி.க.நகர், ஈரோடு கிழக்கு தொகுதிகளில் அதிமுக கூட்டணி என்ன செய்ய போகிறது என்று இன்னும் தெரியவில்லை. இந்த தொகுதி குறித்து இன்னும் முடிவெடுக்காமல் இருப்பதற்கு பின் இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கலாம் என்கிறார்கள்.

தேமுதிக
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறிய .காரணத்தால் இந்த தொகுதிகள் கூடுதலாக இருந்துள்ளது. இதனால் இனிமேல்தான் இந்த தொகுதிகள் குறித்து ஆலோசனை செய்து, அதன்பின் இதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இன்னொரு பக்கம் அதிமுக தரப்பு வேண்டும் என்றே இந்த 10 தொகுதிகளில் ஹோல்டில் வைத்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.

காரணம்
இந்த தொகுதிகள் குறித்து இப்போது முடிவு எடுக்க வேண்டும். இன்னும் 2 நாட்களுக்குள் முக்கியமான சிறிய கட்சிகள் கூட்டணிக்கு வரும். அவர்களுக்கு இந்த தொகுதிகளை கொடுப்பது சரியாக இருக்கும். இல்லையென்றால் ஒரு சில தொகுதிகளை பாமக, பாஜகவிற்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள தொகுதிகளில் நாம் போட்டியிடலாம் என்ற முடிவில் அதிமுக இருக்கிறது.












Click it and Unblock the Notifications