பாஜகவில் நயினார்... அதிமுகவில் சூலூர் கந்தசாமி தலைமையிலா? மறுத்தாலும் விலகாத கட்சி தாவல் சந்தேகம்!
சென்னை: அதிமுகவின் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கந்தசாமி, ஆளும் திமுக அரசையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் சூலூர் கந்தசாமி தலைமையில் திமுக ஆதரவு அணி உதயமாகிவிட்டதோ என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
தமிழக அரசியலில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக சில எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் தனி ஆவர்த்தனம் செய்வது வழக்கமானதுதான். இத்தகைய எண்ணிக்கை சொற்பமாக இருந்தாலும் பரபரப்புகளை கிளப்புவதற்கு பஞ்சமில்லாதவர்கள்.

பாஜக நயினார்
அண்மையில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பங்கேற்றார். அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், முத்தமிழறிஞர் கலைஞர், தளபதி என ஒரு பக்கா திமுககாரரைப் போலத்தான் பேசினார் நயினார் நாகேந்திரன். இதனால் நயினார் நாகேந்திரன், பாஜகவின் திமுக ஆதரவு அணியா? என்கிற கேள்விகளுடன் செய்திகள் வெளியாகி இருந்தன.

அதிமுக திமுக மோதல்
இந்நிலையில் அதிமுகவின் சில எம்.எல்.ஏக்கள், ஆளும் திமுக தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. இதனை சகிக்க முடியாத எடப்பாடி பழனிசாமி, திமுகவின் 10 எம்.எல்.ஏக்கள் கூட எங்களுடன் பேசுகிறார்கள் என்றார். இதற்கு திமுகவின் பதிலடியாக, உங்க கட்சியின் 40 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பி.க்கள் எங்களுடன் பேசுகின்றனர் என சொல்லப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட, உங்க கூட உங்க கட்சி எம்.எல்.ஏ. கூட பேசுவதில்லையே என கிண்டலடித்துவிட்டிருந்தார் எடப்பாடியை!

அதிமுக கந்தசாமி
இப்போது அதிமுக தருணம் போல. அதிமுகவின் சூலூர் கந்தசாமி எம்.எல்.ஏ.தான் தமது திமுக ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிமுகவின் கோட்டை என்கிற கொங்கு மண்டலத்த்ன் பள்ளபாளையம் நிகழ்ச்சியில்தான் கந்தசாமி எம்.எல்.ஏ., தமிழக அரசை ஆஹோ ஓஹோவென புகழ்ந்து தள்ளிவிட்டார். அப்புறம் என்ன பஞ்சாயத்தும் பரபரப்பும் இப்போது பற்றிக் கொண்டிருக்கிறது.

அதிமுகவில் திமுக அணி?
பாஜகவில் நயினார் நாகேந்திரன் எப்படி திமுக ஆதரவாக உருமாறிவிட்டார் என்கிற சந்தேகம் எழுந்ததோ அதேபோல சூலூர் கந்தசாமி, அதிமுகவில் இருந்து கொண்டே திமுக ஆதரவாக மாறிவிட்டாரா? என்கிற விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஆனால் சூலூர் கந்தசாமி ஒரு பக்கம் இதனை மறுத்துக் கொண்டே திமுக ஆதரவு டிவி சேனல்களுக்கு சோலோவாக பேட்டி கொடுப்பது பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது.

திட்டவட்டமறுப்பு
இது தொடர்பாக விளக்கம் அளித்த சூலூர் கந்தசாமி, 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருக்கிறேன். ஊராட்சி மன்றத் தலைவர் பதவி முதல் இன்றைய எம்.எல்.ஏ. பதவி வரை அத்தனையும் அதிமுகவே கொடுத்தது. இத்தனைக்கும் காரணம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் அமைச்சர் எஸ்பி வெலுமணியும்தான். நான் திமுகவுக்கு தாவப் போகிறேன் என்பது பொய். வதந்தி. அப்படி நான் கட்சி மாறினால் என் சந்ததியே நாசமாகப் போகும் என பதறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications