சாலை மறியல் செய்த ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் 63 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கலைவாணர் அரங்கம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் 63 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கலைவாணர் அரங்கம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பி.எஸ். உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் 63 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றாக கூடுதல், அரசாங்க உத்தரவை மதிக்காமல் இருத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கையின் போது, அமைச்சர் பொன்முடி பேசும்போது, புதிதாக பல்கலைக்கழகங்கள் உருவாக்குவதால் எந்த பயனும் இல்லை. அரசுக்கு தான் வீண் செலவு ஏற்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் மற்றும் சட்டமுன்வடிவு ஒன்றை அறிமுகம் செய்தார். அதில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கல்லூரிகளை இணைப்பதன் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தினை ஒருங்கிணைந்த வகையில் இருந்து இணைக்கப்பட்ட வகையாக மாற்றுவதற்கும் மற்றும் 2013ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைச்சட்டம், 1981ம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைச் சட்டத்தினை திருத்தம் செய்யவும், 2021ம் ஆண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தினை நீக்கவும் அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இதனை ஆரம்ப நிலையிலேயே அதிமுகவை சேர்ந்த கே.பி.அன்பழகன் கடுமையாக எதிர்த்தார். தொடர்ந்து கடும் அமளிக்கு இடையே தீர்மானம் பேரவையின் அனுமதிக்கு விடப்பட்டது. ஏற்போர் அதிகமாக இருந்ததால் தீர்மானம் நிறைவேறியது.
அப்போது அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பினர். அப்போது சபாநாயகர் அப்பாவு, உங்கள் கருத்துக்களை, சட்டமுன்வடிவு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது பேசுங்கள், இப்போது உட்காருங்கள் என்றார்.
சட்டசபையில் பேசிய எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்: தீர்மானத்தை ஆரம்ப நிலையிலே நாங்கள் எதிர்க்கிறோம் என்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கல்விக்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி, அவரது பெயரில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தியிருக்கிறோம் என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, சட்ட முன்வடிவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது தான் உறுப்பினர்கள் பேசமுடியும். அவை முன்னவராக இருந்த உங்களுக்கு தெரியும் என்றார்.
சபாநாயகர் அப்பாவு பேசும் போது, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது பேசுவது தான் சட்டம். அலுவலுக்கு எடுத்துக்கொள்ளும் போது பேச உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம். சட்டமுன்வடிவை ஆரம்பத்திலேயே நீங்கள் எதிர்ப்பு தெரிவித்து விட்டீர்கள். அது, அவையில் பதிவு செய்யப்பட்டு விட்டது என்று கூறினார்.
தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அவையில் கூச்சல், குழப்பத்துடன் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்திக்கொண்டிருந்தனர். பிறகு அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். கலைவாணர் அரங்கத்தில் இருந்து ஓபிஎஸ் தலைமையில் வெளியே வந்த அதிமுக எம்எல்ஏக்கள் வாலாஜா சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கக்கூடாது என்று முழக்கமிட்டனர். கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் என்று கூறி முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. காவல்துறை இணை ஆணையர் தலைமையிலான போலீசார் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், வேன்களில் ஏற்றிக்கொண்டு வந்து, திருவல்லிக்கேணியில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்தனர். பிற்பகலில் விடுவித்தனர்.
இந்தநிலையில் தான் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்பது தொடர்பான சட்ட முன்வடிவு எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்புக்கு இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். பா.ம.க. எதிர்ப்பும் ஆதரவும் தெரிவிக்காத நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு கட்சியினரின் விவாதத்துக்குப்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இந்நிலையில் கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பி.எஸ். உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் 63 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றாக கூடுதல், அரசாங்க உத்தரவை மதிக்காமல் இருத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications