நீங்க அதை பார்த்தீங்களா? எடப்பாடி சொல்லை தட்டாத செங்கோட்டையன்! அதிமுகவில் பஞ்சாயத்து ஓவர்?
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர். எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை அடுத்து கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கையில் கருப்பு பட்டையுடன் வந்திருந்தனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருப்பு பட்டை அணியாத நிலையில், அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கையில் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தார். ஆனால் நேற்று எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முதல் நாளில் கரூர் வேலுச்சாமிபுரம் தவெக கூட்ட நெரிசலில் உயர்ந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதிலளித்தார். இந்த நிலையில் சட்டசபையில் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கையில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர்.

தமிழக சட்டசபை
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுகவினர் கருப்பு பட்டை அணிந்து வந்து பங்கேற்றதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து எதிர்க்கட்சியினரை பேசவிடாமல் தடுப்பதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். முன்னதாக சட்டசபையில் அதிமுகவினருக்கும் திமுக அமைச்சர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அதிமுக எம்எல்ஏக்கள்
இந்த நிலையில் தான் எடப்பாடி அணியில் இணைந்து இருக்கிறார் செங்கோட்டையன். அதாவது மற்ற அதிமுக எம்எல்ஏக்களை போலவே எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி செங்கோட்டையன் கையில் கருப்பு பட்டை அணிந்தபடி பங்கேற்று இருந்தார். ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கையில் கருப்பு பட்டை அணியாமல் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை நிகழ்வுகளை புறக்கணித்து வெளியேறிய போது மற்ற எம்எல்ஏக்களுடன் செங்கோட்டையனும் வெளியேறினார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் அவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
செங்கோட்டையன்
அதே நேரத்தில் நேற்று எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனைக் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்ததையும் கவனிக்க வேண்டும். நேற்று முதல் நாள் கூட்டம் நடைபெற்ற போது எதிர்க்கட்சித் தலைவர் அறையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் சட்டசபையில் இரண்டு நாள் நிகழ்வுகளில் யார் யார் எந்தெந்த விவகாரங்கள் குறித்து பேசுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி
அதில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாத நிலையில் இன்று கட்சி தலைமையின் அறிவுறுத்தல்படி கையில் கருப்பு பட்டை அணிந்துள்ளதோடு கூட்டத்தையும் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவிநாசி அத்திக்கடவு பாராட்டு விழா தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்தார். அதற்கு பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் பேசியதால் அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications