சிக்னல் கொடுத்த ‘மேலிடம்’! ஜரூராக நடக்கும் ஏற்பாடுகள்.. எடப்பாடிக்கு குடைச்சல் கொடுக்கும் ஓபிஎஸ்!
சென்னை : அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியால் வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசிய பேச்சு எடப்பாடி தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் நிலையில் சூட்டோடு சூடாக மேலும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க தேனி தரப்பு தயாராகி வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறியிருக்கின்றனர்.
அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதாவின் கண்ணசைவில் ராணுவ கட்டுப்பாட்டோடு இருந்த இயக்கம் என அனைவருமே கூறுவார்கள். ஆனால் தற்போது திசைகொன்றாக அந்த கட்சி பல அணிகளாக சிதறி கிடக்கிறது.
ஒருபுறம் ஒற்றைத் தலைமை நான்தான் எனக் கூறும் எடப்பாடி பழனிச்சாமி, இணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறும் ஓ.பன்னீர்செல்வம், நான்தான் பொதுச்செயலாளர் என்ற சசிகலா, தனிக்கட்சியையே ஆரம்பித்துவிட்ட டிடிவி தினகரன் என நான்கு அணிகளாக அந்த கட்சி உடைந்திருக்கிறது.

அதிமுக விவகாரம்
ஏற்கனவே நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் இன்று சசிகலா தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் புகார் கொடுத்திருக்கும் நிலையில் அது தொடர்பான விசாரணை தனியே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிமுகவை ஒன்றாக நிர்வகித்து வந்த எடப்பாடியும் ஓபிஎஸ் தற்போது தேர்தல் தோல்விக்கு பிறகு தொடர்ந்து மல்லுக்கட்டி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கிவிட்டதாக ஓபிஎஸ் அதிரடி காட்டினார்.

மோதல் போக்கு
தற்போது இருவருமே தாங்கள் தான் அதிமுக தலைமை எனக் கூறிவரும் நிலையில் பொதுச் செயலாளர் தொடர்பாக பல்வேறு புதிய விதிகளை கொண்டு வந்து அவரை தவிர யாருமே போட்டியிட முடியாதபடி ஏற்பாடுகளை செய்து விட்டார் எடப்பாடி. தற்போதைய சூழலில் உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் உத்தரவின்படி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி தான் ஆனால் இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்கு ஜனவரி முதல் வாரத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக தலைமை
அதே நேரத்தில் அதிமுகவில் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என பாஜக தலைமை கூறிவரும் நிலையில் அக்கட்சிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே தொடர்ந்து உரசல் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே இபிஎஸ் தரப்பு முன்னாள் அமைச்சர்கள் பாஜகவை உசுப்பேற்றி வரும் நிலையில் சிவி சண்முகம் வெளிப்படையாகவே அந்த கட்சியை விமர்சித்து பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜக கூட்டணியில் இருந்து எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி பழனிச்சாமி வெளியேறலாம் எனவும் பரபரப்பாக எதிர் நோக்கப்படுகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் சசிகலா டிடிவி வைத்து அதிமுக புதிய கூட்டணியை உருவாக்க பாஜக தலைமை திட்டமிட்டு வருகிறது.

பின்னணி?
இதனால் எடப்பாடி தரப்பு கடும் அதிருப்தி அடைந்திருக்கும் நிலையில் நாளை அவர் தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தான் குஜராத் சென்ற ஓபிஎஸ் பாஜக தலைவர் ஜே பி நட்டாவை சந்தித்து பேசினார். அதன்பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் கூட்டப்பட்டது. இதனால் பாஜக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில்தான் ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினர் எனவும் எடப்பாடி தரப்புக்கு கடும் நெருக்கடி கொடுக்க பாஜக தலைமை உத்தரவிட்டு உள்ள நிலையில் அதற்கு அடுத்ததாக அவர் போட்டி பொதுக்குழு எனும் ஆயுதத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்பாடுகள் தீவிரம்
தற்போதைய சூழலில் எடப்பாடி தரப்பு மட்டுமே தேர்தல் ஆணையத்தில் நிர்வாகிகள் பட்டியலை சமர்ப்பித்திருக்கும் நிலையில் போட்டி பொதுக்குழுவை நடத்தி அதில் எடுக்கப்படும் முடிவுகள் தீர்மானங்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய ஓபிஎஸ் முடிவெடுத்து இருக்கிறார். இதற்கு பாஜக தலைமை ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவார் என்ற தகவலின் பெயரில் தான் அது குறித்து ஆலோசனை நடத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி கூட்டி இருக்கிறார் என்றும் தகவல்கள் உலாவுகிறது. மேலும் போட்டி பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள், தீர்மானங்களும் தனிதனியாக தயராகி வருகிறது. எது எப்படி எனினும் இன்னும் ஒரு வார காலத்திற்குள் அதிமுகவில் இன்னும் பல விறுவிறுப்புகளும் பரபரப்புகளும் அரங்கேறலாம் என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுக நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications