அடேங்கப்பா.. அமெரிக்காவிற்கு ட்ரம்ப், தமிழ்நாட்டிற்கு ஓபிஎஸ்! எடப்பாடி தரப்பு முன்வைத்த பரபர வாதம்
சென்னை: ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் டிரம்பின் ஆதரவாளர்கள் போல் நடந்து கொண்டார்கள். கேப்பிட்டல் ஹில்லில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் புகுந்து சூறையாடியதைப் போல அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சூறையாடினார்கள் என்றும் இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தது.
பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பற்றி விவாதிக்கப்பட உள்ளது என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும், இதை அவர் மறுக்க முடியுமா? என உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பாக வழக்கு விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேள்வி எழுப்பினர்.
சென்னை வானகரத்தில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணை நடைபெற்றது.
ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் ரஞ்சித்குமார் வாதங்களை முன்வைத்தார். அதில் உயர்நீதிமன்ற உத்தரவில் பல்வேறு விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தனர். மேலும் 2011 டிசம்பரில் வரையறுக்கப்பட்ட அதிமுக சட்ட விதிகளை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் வழக்கறிஞர் முன் வைத்தார்.
தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிகாரம் இல்லை. 5 ஆண்டுக்கு என ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்த பின் பொதுக்குழு கூட்ட அதிகாரம் இல்லை என்று வாதிட்டார் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித் குமார். எம்ஜிஆர் மறைவுக்கு பின் தற்போதைய நிலை போலவே அன்றும் அதிமுக பிளவை சந்தித்தது. கட்சியின் நிர்வாகத்தை ஜெயலலிதா கையில் எடுத்த பின் சட்ட விதிகள் படி அதிமுக தொடர்ச்சியாக செயல்படுகிறது எனவும் வாதிட்டார் ரஞ்சித் குமார். வெள்ளிக்கிழமை ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முடிந்த பின்னர் வழக்கு விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இன்று பிற்பகலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் அரியமா சுந்தரம் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் 2460 உறுப்பினர்கள் கலந்தகொண்டு எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக அங்கீகரித்தனர். இது 94.5% ஆதரவு என வாதிட்டார்.
பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட உள்ளது என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும். இதை அவர் இல்லை என்று மறுக்க முடியுமா?. ஜூன் 23ஆம் தேதி கூட்டத்தில் கையெழுத்தாகிய பொதுக்குழு அறிவிப்பில் 3-7 வரையிலான தீர்மானங்கள் ஒற்றைத் தலைமை பற்றிய விவாதம் குறித்தவையாகும் எனவும் வாதிட்டார்.
நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்பது ஓபிஎஸ் தரப்புக்கு ஒரு பிரச்னையும் அல்ல. ஒருங்கிணைப்பாளர் இல்லாமலே ஜூலை 11 கூட்டத்தை அவைத்தலைவர் அறிவித்தார் என்பதுதான் ஓ.பன்னீர் செல்வத்தின் பிரச்சனை. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பதவிகள் நீக்கப்பட்டுவிட்டதால் அவை அன்றோடு முடிந்துவிட்டன. மேலும் 4 ஆண்டுகள் பொறுப்பு உள்ளது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் வாதம் வைக்கப்பட்டது.
மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் டிரம்பின் ஆதரவாளர்கள் போல் நடந்து கொண்டார்கள். கேப்பிட்டல் ஹில்லில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் புகுந்து சூறையாடியதைப் போல அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சூறையாடினார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் தனத வாதத்தை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்தார்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த போது ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு சென்றார். அங்கு காத்திருந்த எடப்பாடி ஆதரவாளர்கள் தடுத்தனர். இதனையடுத்து ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் கல்வீசி தாக்கிக்கொண்டனர். ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை போர்களமானது.
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அனைவரும் எம்ஜிஆர் மாளிகையின் பூட்டப்பட்டிருந்த கதவுகளை எட்டி உதைத்து திறந்து கொண்டு போய் அலுவலகத்திற்குள் இருந்தவைகளை சூறையாடினர். இந்த சம்பவத்தை கேப்பிட்டல் ஹில்லில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் புகுந்து சூறையாடியதுடன் ஒப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர்.
வழக்கு விசாரணை மீண்டும் நாளை புதன்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நிதிபதிகள் யாருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி நிலைக்குமா? அல்லது ஓ.பன்னீர் செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி நீடிக்குமா என்பது உச்சநீதிமன்றம் அளிக்கப்போகும் தீர்ப்பினைப் பொறுத்தே உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு.. பவர் இருக்கு.. எடப்பாடி பரபர வாதம்.. விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!