அதிமுக பிரச்சினையில் தலையிடவில்லை..ஒரே வேட்பாளர் இரட்டை இலை.. பாஜகவின் முடிவு சொன்ன அண்ணாமலை
அதிமுகவின் உட்கட்சி பிரச்சினையில் தலையிட மாட்டோம் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை: வலிமையான ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் அதிமுக ஒன்றாக இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று இரண்டு தலைவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி பிரச்சார களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ.பன்னீர் செல்வம் அணியும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிக்குழுவையும் நியமனம் செய்துள்ளது.

அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை இரு அணிகளுமே கேட்டால் சின்னம் கண்டிப்பாக முடங்கும் சூழ்நிலை உருவாகும். சின்னம் முடங்கினால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவருமே சுயேச்சை சின்னத்தில்தான் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கும்.
பாஜகவின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கா? ஓ.பன்னீர் செல்வத்திற்காக என்பது தெளிவாக தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் டெல்லி சென்று இருந்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் இன்று காலையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். இருவரையும் தனித்தனியே சந்தித்து பேசி சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியானது.
இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தேசிய கட்சியாக உள்ள பாஜக ஒருபோதும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்காது என்று கூறினார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக ஒரே ஒரு வேட்பாளரை நிறுத்தி அங்கீகரிக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று இரண்டு தரப்பினரையும் வலியுறுத்தினோம். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தினோம்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தர வலியுறுத்தினோம். ஒரே ஒரு வேட்பாளர் அதோடு இரட்டை இலை சின்னம் என்பது கூடுதல் பலத்தை தரும் என்றும் பேசினோம்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பலருக்கும் தெரியும். இதனையடுத்து அறிக்கை கொடுத்துள்ளனர். ஒரே ஒரு வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் பாஜக முழு களப்பணியாற்றும் என்று தெரிவித்து உள்ளோம். பன்னீர் செல்வம் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார்.. 2024ஆம் ஆண்டில் மிகப்பெரிய சாதனை செய்யப்போகும் கூட்டணி
பழனிச்சாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். திமுகவினர் படை பலம், பணபலத்தை இறக்கி விடுகின்றனர். தமிழக மக்களின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
அதிமுக உட் கட்சி பிரச்சினையை அவர்களாக தீர்த்தக்கொள்ள வேண்டும். அதனை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு தெரிவித்துள்ளோம். அந்த பிரச்சினையில் நாங்கள் தலையிடவில்லை.
தமிழ்நாட்டில் பிறரது பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளர வேண்டிய அவசியம் இல்லை. எங்களுடைய சக்தியை பயன்படுத்தி நாங்கள் வளர்ச்சியடைவோம். இரண்டாம் கட்ட தலைவர்கள், மூன்றாம் கட்ட தலைவர்கள் பேசுவது வருத்தம் தருகிறது. நல்லமுடிவு இன்று மாலைக்குள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார். கூட்டணி தர்மத்தை காக்க எங்களின் சக்திக்கு மீறி உழைத்து வேட்பாளரை வெற்றி பெற வைப்போம் என்றும் அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications