மீண்டும் மீண்டுமா? ‘ஜெயலலிதாவுக்கே இந்த நிலை!’ கோர்ட் தீர்ப்பு.. பறிபோன நிரந்தர பொதுச் செயலாளர் பதவி
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பால், இடைக்கால பொதுச் செயலாளராக தொடர்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால், ஜெயலலிதாவின் 'நிரந்தர பொதுச் செயலாளர்' நிலை மீண்டும் பறிபோயுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நிரந்தர பொதுச்செயலாளர் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜூலை 11 பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு செல்லாது என அறிவிக்கப்பட்டதால், திடீர் திருப்பமாக ஜெயலலிதா பதவியும் தப்பியது.
இந்நிலையில், பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று இன்று ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளதால், ஜெயலலிதா வகித்த நிரந்த பொதுச் செயலாளர் பதவி மீண்டும் பறிபோயுள்ளது.

நிரந்தர பொதுச் செயலாளர்
ஜெயலலிதா 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியை வகித்து வந்தார். அவரது இறப்பிற்கு பிறகு சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக பதவியேற்றார். பின்னர் சசிகலா நீக்கப்பட்டு ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளர் எனவும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி முறையே ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வகித்து வந்தனர். ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஜெயலலிதா வகித்து வந்த நிரந்தர பொதுச் செயலாளர் பதவியும் ரத்து செய்யப்பட்டது.

முந்தைய தீர்ப்பு
ஈபிஎஸ் நடத்திய பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தீர்ப்பளித்த ஐகோர்ட் தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது. கட்சி விதிப்படி பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்துதான் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியும் என உத்தரவிட்டார். இதனால், ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து நிறைவேற்றிய தீர்மானம் ரத்தானது.

திரும்ப வந்த பதவி
அந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றானது. இதன் காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த 'நிரந்தர பொதுச்செயலாளர்' என்ற பதவியும் தப்பியது. ஜெயலலிதாவின் பதவியையே பறித்துவிட்டதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், இந்த திருப்பம் மிக முக்கியமாக பார்க்கப்பட்டது. அந்த தீர்ப்பின் மூலம் ஜெயலலிதாவின் பதவி தப்பியதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர்.

ஈபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பு
இந்நிலையில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம், அந்தப் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி எடப்பாடி பழனிசாமி மீண்டும் இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட உள்ளார்.

ஜெயலலிதா பதவியும் காலி
ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து இயற்றிய தீர்மானமும், மீண்டும் பொதுச் செயலாளர் பதவியைக் கொண்டு வருவதற்கான தீர்மானமும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தீர்மானமும், இன்றைய தீர்ப்பின் மூலம் மீண்டும் செயலாக்கத்திற்கு வருகிறது. இதனால், 'நிரந்தர பொதுச் செயலாளர்' என்ற ஜெயலலிதாவின் அந்தஸ்து மீண்டும் பறிபோயுயுள்ளது.

15 நாட்களில்
ஜூலை 11 முதல் ஜெயலலிதாவின் 'நிரந்தர பொதுச் செயலாளர்'பதவி எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் பறிக்கப்பட்ட நிலையில், அதற்கடுத்த 1 மாதத்தில் கோர்ட் தீர்ப்பின் மூலம் மீண்டும் ஜெயலலிதாவுக்கு 'நிரந்தர பொதுச் செயலாளர்'பதவி கிடைத்தது. இந்நிலையில், அடுத்த 15 நாட்களில் மீண்டும், அந்தப் பதவி ஜெயலலிதாவை விட்டு பறிபோயுள்ளது. ஜெயலலிதாதான், நிர்வாகிகளையும், அமைச்சர்களையும் அடிக்கடி பதவியை விட்டு நீக்குவார். இன்று, அவரது மறைவுக்குப் பிறகு அவரது பதவியே நியமிக்கப்படுவதும், நீக்கப்படுவதுமாகத் தொடர்வது தொண்டர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications