ச்சே.. எதிர்பார்த்ததை விட தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி ரொம்ப வீக்கா இருக்கேப்பா.. காங். எம்எல்ஏ கேலி!
திமுக- காங்கிரஸ் கூட்டணி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இமாலய வெற்றியை பெறும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
சென்னை: அதிமுகவிற்கு சின்னம் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. நான்காக சிதறியிருக்கிறார்கள், எதிர்பார்த்ததை விட மோசமான நிலையில் எதிர்க்கட்சிகள் உள்ளன என்று செல்வபெருந்தகை கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் வரும் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது.
வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய பிப்ரவரி 7 ஆம் தேதி கடைசி நாளாகும்.
நாமக்கல்லில் திமுக தொண்டர்களால் திக்குமுக்காடிய உதயநிதி ஸ்டாலின்.. 10 கி.மீ கடக்க 2 மணி நேரம்
ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. எனினும் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேமுதிக, அமமுக வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளன. பாஜக வரும் 31 ஆம் தேதி நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
செல்வ பெருந்தகை பேட்டி
பாஜக போட்டியிடாது என்பதை சூசகமாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. வேட்பாளரை முதல் ஆளாக அறிவித்த காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது. ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக கூட்டணி கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு இடையே காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெபாசிட் வாங்கக்கூட வாய்ப்பு இல்லை
ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வீடு வீடாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோம். எதிரிகளே இல்லை என்று நாங்கள் ஆணவத்தில் எப்பொழுதுமே பேசமாட்டோம். ஆனால் ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு நபரும் அமைச்சர் முத்துசாமிக்கு நல்ல வரவேற்பு அளிக்கின்றனர். சென்று வா வென்று வா ஆசிர்வதித்து அனுப்புகின்றனர். எனவே இமாலய வெற்றியை திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமான நிலையில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. டெபாசிட் வாங்கக்கூட வாய்ப்பு இல்லை என்றுதான் இப்பொழுதே பேசப்படுகிறது.
மரண அடியை சந்திக்க போகிறார்கள்
அதிமுகவிற்கு சின்னம் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. நான்காக சிதறியிருக்கிறார்கள். யார் பாஜகவை தூக்கிப் பிடிப்பது.. ஆர்.எஸ் எஸ். சித்ததாந்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்று பாஜக அலுவலகத்தில் அவர்கள் காவல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தலைமை என்ன சொல்கிறதோ அதை நடைமுறைப்படுத்துவதுதான் அதிமுகவின் வேலையாக உள்ளது. பெரிய இயக்கமான அதிமுக சிதறடிக்கப்பட்டு அந்த இயக்கத்தை அடிமைக் களமாக மாற்றி வைத்து இருக்கிறார்கள். எனவே மிகப்பெரிய பலத்த மரண அடியை சந்திக்க போகிறார்கள்" என்றார்.