ஜெயக்குமார் கைது.. பரபரத்த பட்டினப்பாக்கம்.. 4 வீடு தள்ளி இருந்தும் லேட்டாக தம்பிதுரை என்ட்ரி.!
சென்னை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதால் பட்டினப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஜெயக்குமாரின் வீட்டுக்கு நான்கு வீடுகள் தள்ளி வசித்து வரும் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை அங்கு வரவில்லை எனவும், சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவர் காரில் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற வாக்குப் பதிவில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக புகார் எழுந்தது.
அப்போது அங்கு இருந்த அதிமுகவினர் திமுக தொண்டர் கடுமையாக தாக்கி நிலையில் அங்கிருந்த முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமார் அந்தத் தொண்டரின் சட்டையைக் கழற்றச் சொல்லி அரை நிர்வாணம் ஆக்கியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

ஜெயக்குமார் கைது
இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கண்டனங்கள் தெரிவித்து இருந்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த தண்டையார்பேட்டை காவல்துறையினர் கலவரம் செய்தல், ஆபாசமாகப் பேசுதல், ஆயுதத்துடன் கொலை மிரட்டல் உள்ளிட்ட 10 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று இரவு 8 மணி அளவில் வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்தனர்.

மனைவி கண்ணீர்
அவரது கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பலரும் கூடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டதால் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையை தொடர்ந்து அவரது மனைவி கண்ணீர் விட்டு அழுதார். கள்ள ஓட்டு போடுவதை தட்டிக் கேட்டது ஒரு குற்றமா , என பேசி அவர் எந்த விளக்கமும் கொடுக்காமல் தனது கணவரை அழைத்துச் சென்றதாகவும், தனக்கு மிகவும் பயமாக உள்ளது, அவரை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்த வீடியோ வெளியானது.

பட்டினபாக்கத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பட்டினப்பாக்கம் சாலையில் உள்ள லீத் கேஸ்டில் தெற்கு தெரு பகுதியில் வசித்து வருகிறார். மெயின் ரோட்டில் இருந்து நான்காவதாக அவரது வீடு உள்ளது. அதே தெருவில் 4 வீடுகள் தள்ளிதான் நாடமன்ற முன்னாள் சபாநாயகரும், அதிமுக கழக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரையின் வீடு உள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டுக்கு சுமார் 7.45 மணியளவில் போலீசார் வந்துள்ளனர். அவரை கைது செய்யப்போவதாக கூறியதையடுத்து அங்கு அப்பகுதியைச் சேர்ந்த பலரும் குவிந்தனர். குறிப்பாக அதிமுகவினர் அதிகளவில் திரண்டனர்.

கரூர் தம்பிதுரை
தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட செய்தி காட்டுத் தீ போல பரவிய நிலையில் அங்கு அதிகமானோர் திரண்டனர். ஆனால் நான்கே வீடு தள்ளி உள்ள நிலையில் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரான தம்பிதுரை நீண்ட நேரமாக வரவில்லை. ஜெயக்குமாரை போலீசார் அழைத்துச் சென்ற சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகே அவர் ஜெயக்குமாரின் வீட்டுக்கு காரில் சென்று விசாரித்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் மீண்டும் காரிலேயே வீடு திரும்பியதாககவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.











Click it and Unblock the Notifications