கொடைக்கானல் வீடு.. காங். முன்னாள் எம்பியின் உறவினர் வழக்கு.. பாபி சிம்ஹாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரி காங்கிரஸ் முன்னாள் எம்பி.ஜே.எம்.ஆரூணின் சகோதரர் மகன் உசேன் தொடர்ந்த வழக்கில் நடிகர் பாபி சிம்ஹாவிற்கு ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கொடைக்கானலைச் சேர்ந்தவரான நடிகர் பாபி சிம்ஹா கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில், வீடு கட்டுவதில் ஒப்பந்ததாரர் ஜமீருக்கும், பாபி சிம்ஹாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதனால், கட்டிடப் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதுபற்றி அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாபிசிம்ஹா, "வீடு கட்டுவதற்கு 1.30 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பிறகு கூடுதல் பணிகள் காரணமாக 1.70 கோடி ரூபாய் பணத்தை நான் கொடுத்தேன். புது வீட்டை பார்க்க நான் வந்தபோது, பணிகள் முடிவடையாமல் பாதியில் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
உடனே பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர் ஜமீரிடம் கூறினேன். அதற்கு, ஜமீர் கூடுதலாக பணம் கேட்டார். ஏற்கெனவே செலவு செய்த பணத்துக்கான ரசீதுகளை நான் கேட்டேன். அதன்பின், பல்வேறு காரணங்களை கூறி வீட்டின் கட்டிடப் பணிகளை பாதியில் நிறுத்திவிட்டார். வேறு ஒரு பொறியாளருடன் வீட்டை ஆய்வு செய்த போது தரமற்ற முறையில் கட்டியிருப்பது தெரிய வந்தது. என்னிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வீடு கட்டி தருவதாக ஒப்பந்ததாரர் ஏமாற்றிவிட்டார். நான் விதிகளை மீறி கட்டிடம் கட்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர். ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் என்னை மிரட்டுகிறார்கள். என்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளது. தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். என்னை ஏமாற்றியவர்கள் மீது நீதிமன்றம் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பாபி சிம்ஹா கூறியிருந்தார்.
இதனிடையே செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.-யான ஜெ.எம்.ஏ.ஆரூணின் சகோதரர் மகன் உசேன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில், பள்ளி பருவ நண்பரான நடிகர் பாபி சிம்ஹாவுக்கு அறிமுகமான ஜமீர் காசிம் என்பவர் கட்டுமான ஒப்பந்ததாரர் மூலம், கொடைக்கானலில் வீடு கட்ட பாபி சிம்ஹா முடிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
2022ல் தொடங்கிய கட்டுமான பணி 90 சதவீதம் முடிந்த நிலையில், அதற்கான தொகையை பாபி சிம்ஹா தராததால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், தனது தந்தை ஜே.எம்.அமனுல்லா சமரசம் செய்ததால், தந்தையை மிரட்டி, அவதூறாக திட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, தான் வனத்துறை தொடர்பான பல்வேறு கிரிமினல் வழக்குகளை நான் எதிர்கொண்டு வருவதாக அவதூறு பரப்பியதாகவும், தன்னைப் பற்றி அவதூறாகவும், உருவக் கேலி செய்தும் பேசியதால், தனக்கு மிகுந்த மன உளைச்சலும் வேதனையும் ஏற்பட்டதாகவும் கூறி, இதற்கான மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி பாபி சிம்ஹாவிற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆலந்தூர் நீதிமன்றம், உசேனின் வழக்கு குறித்து பாபி சிம்ஹா பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.












Click it and Unblock the Notifications