தமிழ்மகன் உசேன் இனி என்ன பதவியில் இருப்பார்..? எல்லாம் காலி.. மொத்தமாக திருப்பிப் போட்ட ஐகோர்ட்!
சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இடி போல இறங்கியுள்ளது.
Recommended Video
சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பின் மூலம், எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவைக் கூட்டியதும், இடைக்காலப் பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது என்றாகியுள்ளது.
அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது. மேலும், எடப்பாடி பழனிசாமியால் புதிதாக பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்களின் பதவிகளும் செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலையில், ஜூன் 23க்கு முந்தைய நிலையே தொடர்கிறது. இதனால், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தொடர்வார்கள்.

ஐகோர்ட் தீர்ப்பு
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி, 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

பொதுக்குழு செல்லாது
பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது. ஜூன் 23க்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என ஐகோர்ட் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 23க்கு முந்தைய நிலை
ஜூன் 23ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவுக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், அதிமுகவின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் மகன் உசேன்
ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின்போது தமிழ்மகன் உசேன் அதிமுகவின் நிரந்தர அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய தீர்ப்பின் மூலம், ஜூன் 23க்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என வந்திருப்பதால், அவர் நிரந்தர அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாததாகியுள்ளது. அதே நேரம், அவர் முன்பு இருந்த தற்காலிக அவைத் தலைவராகவே நீடிப்பார்.

எந்தப் பதவி நியமனங்களும் செல்லாது
மேலும், எடப்பாடி பழனிசாமியால், துணைப் பொதுச் செயலாளர்களாகவும், தலைமை நிலைய செயலாளர்களாகவும், மேலும் பல்வேறு பதவிகளுக்கும் நியமிக்கப்பட்ட ஈபிஎஸ் ஆதரவாளர்களின் நியமனங்களும் செல்லாது. அதேபோல, ஓ.பன்னீர்செல்வம் நியமித்த பதவிகளும் செல்லாது. ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் செயல்படுவார்கள்.

பொருளாளர் ஓபிஎஸ்
மேலும், முன்பிருந்தது போலவே ஓபிஎஸ் பொருளாளராகவும் தொடர்கிறார். எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் எனும் பதவியிலும் நீடிப்பார். பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனின் நியமனம் செல்லாது, மீண்டும் கட்சிக் கணக்குகள் ஓபிஎஸ் வசம் வரும் சூழல் இந்தத் தீர்ப்பால் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications