செய்தது என்ன.. அனைத்து கட்சி கூட்டத்தில்.. நடவடிக்கைகளை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்.. சரவெடி!
சென்னை: கொரோன தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தார். இந்த நிலையில் சென்னையில் தற்போது அனைத்து கட்சி தற்போது நடந்து வருகிறது.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, பாஜக, சிபிஎம், சிபிஐ, மமக, கொமதேக, தவாக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனையில் கலந்து கொண்டார். பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.
ஸ்டாலின்
இதில் எதிர்கட்சித் தலைவர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் திமுக கடந்த ஒரு வாரமாக செய்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பட்டியலிட்டார். அதில், திமுக அரசு பதவி ஏற்ற முதல் நாளில் இருந்தே கொரோனாவிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் கொரோனா தொடர்பாக 5 முக்கியமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டிற்காக ஏற்கனவே வார் ரூம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன்
ஆக்சிஜன் இருப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 5 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு தனியாக உருவாக்கப்பட்டு உள்ளது. கொரோனா சிகிச்சை பணியில் உயிர் இழந்த மருத்துவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்காக சர்வதேச டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
ஒடிசா
ஒடிசா, மேற்கு வங்கத்தில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரெமிடிஸ்வர் மருந்து சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியாக சித்த மருத்துவமும் ஊக்குவிக்கப்பட்டு, தாம்பரத்தில் இதற்காக தனி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளன.
ஸ்டாலின்
மருத்துவமனைகளில் படுக்கைகளை உயர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மேலும் சில உத்தரவுகளை வரும் நாட்களில் வெளியிடுவேன், எதிர்க்கட்சிகள் இதில் தேவையான ஆலோசனைகளை வழங்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் இந்த ஆலோசனையில் குறிப்பிட்டார். ஸ்டாலினின் பேச்சை தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.