பிரச்சனையை கிளப்பியது சென்னைக்காரர் இல்லையாம்..தென்மாவட்ட புள்ளிக்கு சிக்கல் - லீக் மேட்டரில் பரபர!
சென்னை : அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசியதாக கூறப்படும் ஆடியோவில், கன்னியாகுமரி அதிமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் பற்றிப் பேசப்படும் கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பி இருக்கின்றன.
அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், அதிமுக நிர்வாகி ஒருவருடன் போனில் பேசும் உரையாடல் என ஒரு ஆடியோ வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி என பலர் பற்றியும் பேசப்படுகிறது. இது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

லீன் ஆன ஆடியோ
கன்னியாகுமரி மாவட்டத்தைச் அதிமுக பிரமுகர் நாஞ்சில் கோலப்பன் என்பவரிடம், அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் போனில் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தொடங்கி முன்னாள் அமைச்சர்கள் பலர் தொடர்பான பல்வேறு ரகசியங்களையும், கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் அந்த ஆடியோவில் புட்டுப்புட்டு வைத்துள்ளார். ஆனால், அதில் பேசியது தான் இல்லை என்றும், மிமிக்ரி செய்யப்பட்டது என்றும் பொன்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அணிக்குள் குழப்பம்
அதேசமயம், அதில் மறுபக்கம் பேசியதாக கூறப்படும் அதிமுகவைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பன், போனில் பேசியது தானும், முன்னாள் அமைச்சர் பொன்னையனும் தான் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பான ஆதாரமும் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் நாஞ்சில் கோலப்பன். இந்த ஆடியோவால் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு இடையே குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

பணத்தை பாதுகாக்க
பொன்னையன் பேசுவதாக வெளிவந்திருக்கும் அந்த ஆடியோவில், "தொண்டர்களெல்லாம் இரட்டை இலை பக்கம் தான் இருக்கிறார்கள். தலைவர்கள் பணத்தின் பக்கம் நிற்கிறார்கள். அவரவர் பணத்தைப் பாதுகாக்க, டெல்லியை பிடித்துக் கொண்டு ஆடுகின்றனர். இப்போது தங்கமணி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ஸ்டாலினிடம் ஓடுகிறார். அதேபோல கே.பி.முனிசாமியும் ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திவிட்டார்." எனத் தொடங்கி பல்வேறு ரகசியங்கள் உடைக்கப்படுகின்றன.

தளவாய் சுந்தரம்
மேலும் அந்த ஆடியோவில் முன்னாள் அமைச்சரும் குமரி எம்.எல்.ஏவுமான தளவாய் சுந்தரமும் தாக்கப்பட்டுள்ளார். "குறைந்தது 100 கோடி, 200 கோடி ரூபாய் இல்லாத மாவட்டச் செயலாளர் இன்று இல்லை. எடப்பாடி பழனிசாமி பின்னால் போனால்தான் பணத்தைப் பாதுகாக்க முடியும். எல்லாரும் அதனால்தான் எடப்பாடி பழனிசாமி பின்னால் செல்கிறார்கள். தளவாய் சுந்தரம் தான் இந்தியாவிலேயே பெரிய புரோக்கர். எடப்பாடி பழனிசாமியை கெடுக்குறதே அவர்தான்." எனப் பேசப்படுகிறது.

ஜெயக்குமார் இல்லை
அதிமுகவில் நடந்த ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமானதற்கு காரணம் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தது என்கிறார்கள். ஆனால், தளவாய் சுந்தரம் தான் ஒரு சேனலில், எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் என்று கூறி அந்தப் பிரச்சனையைக் கிளப்பி விட்டவர் என்கிறார் பொன்னையனுடன் போனில் பேசும் கோலப்பன். இதனை எதிர்முனையில் பேசுபவரும் மறுக்கவில்லை.

பணம் வாங்கிக்கொண்டு
அதிமுகவின் அமைப்புச் செயலாளரான தளவாய் சுந்தரம் தற்போது கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். அதிமுகவில் முன்னர் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் இருந்தார் தளவாய் சுந்தரம். அவர் அதிமுகவில் கட்சிப் பதவிகளை பணத்தைப் பெற்றுக்கொண்டு, தனக்கு வேண்டியவர்களுக்கே வழங்குவது தொடர்பாகவும் இந்த ஆடியோவில் பேசப்பட்டிருக்கிறது.

பரபரப்பு
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முக்கியமான முன்னாள் அமைச்சர்கள் பலரும் இந்த ஆடியோவால் சிக்கியிருக்கும் நிலையில், தளவாய் சுந்தரம் பற்றிய குற்றச்சாட்டுகள் குமரி மாவட்ட அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. போனில் பேசியவரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகுதி அதிமுகவினர் மத்தியில் இதுவே பேச்சாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications