அமாவாசையும் அமைச்சரவை மாற்றமும் - அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா இடமாற்றப்பட்டதன் பின்னணி
அமாவாசைக்கு இன்னும் இரண்டு தினங்கள் உள்ளநிலையில் தமிழக அமைச்சரவையில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: ஜாதிப்பெயரைச் சொல்லி திட்டியதாக புகாரில் சிக்கிய அமைச்சர் ராஜ கண்ணப்பனின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. அமாவாசைக்கு இன்னும் இரண்டு தினங்கள் உள்ளநிலையில் தமிழக அமைச்சரவையில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011 - 2016 அதிமுக ஆட்சி காலத்தில் அமாவாசை வரப்போகிறது என்றாலே அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு அச்ச உணர்வு அதிகரிக்கும். ஒருவித உதறலுடனேயே இருப்பார்கள். பலரது பதவி பறிக்கப்படும். அமைச்சராக சிலர் எம்எல்ஏவாக மாறுவார்கள். எம்எல்ஏவாக இருப்பார்கள் அமைச்சராக சைரன் வைத்த காருக்கு மாறுவார்கள்.
திமுக ஆட்சி காலத்தில் முதன் முறையாக அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
இலங்கை பொருளாதார நெருக்கடி எப்படி முடிவுக்கு வரும்? - 5 வாய்ப்புகள்
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த பலருமே தொலைக்காட்சிகளில் பிளாஷ் நியூஸ் பார்த்துதான் அமைச்சரவை மாற்றம் பற்றியே அறிந்து கொள்வார்கள். யார் தலை உருளுமோ என்ற எண்ணம்தான் அப்போது அமைச்சராக இருந்தவர்களின் மத்தியில் மேலோங்கியிருந்தது. அவர்கள் நினைப்பது போலவே அமாவாசை, பவுர்ணமியை ஒட்டியே அமைச்சரவை மாற்றம், அமைச்சர்கள் நீக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
அமைச்சரவை மாற்றம்
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அடிக்கடி அமைச்சரவை மாற்றம் ஏற்படும் மியூசிக்கல் சேர் போல அமைச்சரவை மாற்றமும் நடைபெறும். அதுவும் அமாவாசை பவுர்ணமியை ஒட்டித்தான் மாற்றங்கள் நடைபெறும்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சர்கள் நித்ய கண்டம் பூரண ஆயுசு நிலையில் இருந்து தப்பி நிம்மதியாக இருந்தனர்.
திமுக ஆட்சி காலத்தில்
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எடப்பாடி அமைச்சரவையில் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியில் இருந்து எம்.மணிகண்டன் நீக்கப்பட்டார். கருணாநிதி முதல்வராக இருந்த திமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் பதவி பறிப்பு என்பது இருக்காது 5 ஆண்டுகளில் பெரிய அளவில் மாற்றமும் ஏற்பட்டதில்லை.
மு.க ஸ்டாலின் அமைச்சரவை
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. கலெக்சன், கரப்சன் இல்லாத அமைச்சரவையாக இருக்கும் என்று ஆரம்பம் முதலே கூறி வந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். சில அமைச்சர்கள் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் மாற்றம் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகின.
ராஜ கண்ணப்பன் இலாகா மாற்றம்
இந்த நிலையில் முதல் முறையாக அமைச்சரவையில் சின்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மாற்றப்பட்டுள்ளார். ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரது அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. அமாவாசைக்கு இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில் திமுக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பிரச்சினைக்குக் காரணம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் ராஜேந்திரன். அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஜாதி ரீதியாக திட்டியதாக புகார் எழுந்தது. செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரன், உன்னை இடமாற்றி காட்டட்டுமா.. என்று கூறி என்னை ஜாதி ரீதியாக 6 முறை எஸ்சி என்று கூறி திட்டினார். எனக்கு 57 வயதாகிறது. இந்த வயதில் என்னை இப்படி யாரும் திட்டியது இல்லை. எனக்கு மனக்காயம் ஏற்பட்டுள்ளது. எனக்கு தூக்கம் இல்லை. சாப்பிட முடியவில்லை என்று கூறினார். இதனையடுத்து ஒன்றிய அலுவலகம் முன் அலுவலக ஊழியர்கள் இன்று காலை போராட்டம் செய்தனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்துறையில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த மாற்றத்தின் மூலம் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.