கிருஷ்ணகிரி கம்பீரம்.. "தெற்கில் இருந்து இந்திய வரலாறு எழுதப்பட வேண்டும்".. பூரித்து சொன்ன ஸ்டாலின்
சென்னை: "இந்தியாவின் வரலாறு, தெற்கில் இருந்து துவங்கி எழுதப்பட வேண்டும் என்ற, நம் முழக்கம் மெய்ப்பட பணிகளை தொடர்வோம்" என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்
தமிழர்கள் பண்டைய நாகரீகத்தினர் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள். தமிழகத்தின் கீழடியில்தான் நிறைந்திருக்கின்றன.. கீழடியில் இதுவரை நடந்து முடிந்துள்ள அத்தனை அகழாய்வுகளும் உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளன.. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களின் மூலம் தமிழர்கள் வரலாறு மிகவும் தொன்மையானது என்பது கணக்கிடப்பட்டுள்ளது..

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் சொல்லும்போது, "இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும் என்று பல அறிஞர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், இப்போது, தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதை கீழடி ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்படக்கூடிய சூழலை நாம் இன்றைக்கு பார்க்கிறோம்.
நம்முடைய பண்பாடு - காப்பாற்றப்பட வேண்டும். நம்முடைய கலாச்சாரம் - பாதுகாக்கப்பட வேண்டும். உடனடியாக மத்திய அரசும் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு மாநில அரசும் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கி அதற்குரிய அழுத்தத்தை தரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் தமிழி எழுத்துப் பொறிப்புக்கொண்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வுத்தளத்தில் புதிய கற்காலப்பண்பாட்டைக் கண்டறிய அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு உடைந்த நிலையில் புதிய கற்காலக் கருவி கண்டெடுக்கப்பட்டது. அதனையடுத்து, இடைக்கால வரலாற்றுக் காலத்தைச் சார்ந்ததாகக் கருதப்படும் இரும்பிலான ஏர்க்கலப்பையின் கொழுமுனைக் கிடைக்கப்பெற்றது.
சென்னானூர் அகழாய்வில் 90 செ.மீ முதல் 108 செ.மீ வரையிலான ஆழத்தில் தமிழி எழுத்துப்பொறிக்கப்பட்ட மூன்று பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாறைகளில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துக் கல்வெட்டுகளில் வேள்ஊர், மதிரை, இவகுன்றம், நெல்வெளிஇய், இலஞ்சி, கருஊர், முசிறி, வெள்அறைய், தேனூர், அகழ்ஊர், கோகூர் போன்ற ஊர்ப்பெயர்கள் காணப்படுகின்றன. தற்பொழுது சென்னானூர் பானை ஓட்டில் ஊகூர் என்ற ஊர்ப் பெயர் கிடைக்கப்பெற்றுள்ளது சிறப்பானதாக கருதப்படுகிறது" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, "இந்தியாவின் வரலாறு, தெற்கில் இருந்து துவங்கி எழுதப்பட வேண்டும் என்ற, நம் முழக்கம் மெய்ப்பட பணிகளை தொடர்வோம்" என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்..
இதுதொடர்பாக முதல்வர் விடுத்திருக்கும் அறிக்கை இதுதான்: "தடைகளை கடந்து தரவுகளை சேகரிக்கிறோம். மூடியுடன் பானை, பாசிமணிகள், சுடுமண் கிண்ணங்கள், தொட்டி, உறைகிணறு, வெள்ளியிலான முத்திரை காசு, சிவப்பு வண்ண கொள்கலன், தமிழி பானை ஓடு, இரும்பிலான ஏர் கலப்பையின் கொழுமுனை, தக்களி, தந்தத்தால் செய்யப்பட்ட பகடை காய், சுடுமண் சிற்பம், உணவு கிண்ணம், செம்பில் செய்யப்பட்ட அஞ்சனக்கோல், ஆணி என, அகழாய்வுகளில் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
தமிழரின் வரலாற்றையும், பண்பாண்டையும், அறிவியல் சான்றுகளுடன் உலகிற்கு எடுத்துக்கூற நாம் மேற்கொண்டுள்ள பயணம், சரியான திசையில் செல்வதை, இது உறுதி செய்கிறது. இந்தியாவின் வரலாறு, தெற்கில் இருந்து துவங்கி எழுதப்பட வேண்டும் என்ற, நம் முழக்கம் மெய்ப்பட பணிகளை தொடர்வோம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications