அதிமுக வாக்குகளை பிரித்த டிடிவி தினகரன்... 4 முதல் 6 தொகுதிகள் வரை அமமுக வெற்றி... எக்சிட் போல்..!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றிவாய்ப்பு குறித்து பிரபல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில் அமமுகவுக்கு 4 முதல் 6 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதிமுகவின் வாக்குகள் பிரிந்ததில் அமமுகவுக்கு முக்கியப் பங்கு இருப்பதை இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் உணர்த்துகின்றன. டிடிவி தினகரனை அண்டர் எஸ்டிமேட் போட்ட பலருக்கும் இன்று வெளியாகிய எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளன.
பாஜக, பாமக என பெரியக் கட்சிகளை தன்னுடன் கூட்டணியில் வைத்துக் கொண்டு தேர்தலை சந்தித்தது அதிமுக. ஆனாலும் கூட 56 தொகுதிகளில் இருந்து 68 தொகுதிகள் வரை மட்டுமே வெற்றிபெற முடியும் என பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் தேமுதிக, எஸ்.டி.பி.ஐ. என்ற இரண்டு கட்சிகளை மட்டும் கூட்டணியில் சேர்த்து முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்தித்த அமமுக 4 முதல் 6 தொகுதிகளில் வெற்றிபெறும் என்பது தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.
பெரும் பாய்ச்சல் நிகழ்த்தும் திமுக.. 175 இடங்கள் வரை வெல்லும்.. "டுடேஸ் சாணக்யா" எக்சிட் போல்!
ரிபப்ளிக், பி-மார்க், உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளால் அமமுக வட்டாரம் மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் கொண்டுள்ளது. தங்களின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் எக்சிட் போல் முடிவுகள் வெளிவந்துள்ளதாக கருதுகின்றனர் அமமுகவினர்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அமமுகவை அதிமுகவுடன் இணைக்க பாஜக தலைமை விரும்பியதாக தகவல் வெளியாகிய நிலையில் அது போன்று எதுவும் நடக்கவில்லை. ஒரு வேளை அவ்வாறு இணைப்பு நடந்திருந்தால் காற்று அதிமுக பக்கம் வீசியிருக்கக் கூடும்.