தை பிறந்ததும் அதிமுக, அமமுக இணைகிறதா..? கழற்றி விடப்படுகிறாரா தினகரன்??
சென்னை: பாஜகவின் கூட்டணி நெருக்கடி, அரசியல் ரீதியான தொடர் தாக்குதல்கள், அதிமுகவின் எதிர்காலம் ஆகியவற்றை மனதில் வைத்து அதிமுக,அமமுக இணைப்பு விரைவில் அரங்கேறும் என்று தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
அவ்வாறு நிகழும் பட்சத்தில் டிடிவி தினகரன் ஒதுக்கப்படுவார் என்றும் அமமுகவை அவரே வழி நடத்துவார் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்எல்ஏக்களின் தொகுதிகள், உறுப்பினர்கள் மறைந்ததால் காலியான 2 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் மிக முக்கிய தேர்தலான 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் என தமிழகத்தை அடுத்த 5 மாதங்களுக்கு தேர்தல் திருவிழா தான்... கருணாநிதி சிலை திறப்பு என தேர்தல் கூட்டணியையும், தொகுதி கணக்கையும் திமுக தொடங்கிவிட்டது.
மாப்பிள்ளை இவரு தான்... ஆனா அவரு போட்டிருக்கிறது என்னோட சட்டை இல்லை என்ற சினிமா வசனம் போல.. ராகுல் தான் பிரதமராக வேண்டும் என்று ஸ்டாலின் பத்த வைத்த பட்டாசு வட இந்தியாவின் முக்கிய தலைவர்களை வெடித்து தள்ள வைத்தது. மம்தா, அகிலேஷ் என முக்கிய தலைவர்கள் என எதிர்ப்பு குரல் எழுப்ப, இது மக்களின் நலன் பற்றி சிந்திக்காத கூட்டணி, சுயநலமிக்க கூட்டணி என்று பிரதமர் மோடியும் தன் பங்குக்கு வெடி வைக்கிறார். தேசிய அரசியலையும், மாநில அரசியலையும் மையப்படுத்தி திமுக சுறுசுறுப்பாக செல்ல தொடங்கி இருக்கிறது.
தொகுதிகள் கணக்கீடு
காங்கிரசும் தேர்தல் கூட்டாளியான திமுகவுடன் கைகோர்த்து, யாருக்கு எவ்வளவு என்பது வரை தொகுதிகளை பிரித்துக் கொள்ளும் கணக்கீடுகளை தொடங்கி வைத்துவிட்டது. அதற்கு அச்சாரமாக தான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்றும் முடிவுக்கு வந்துள்ளதாக அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றன.
டிடிவியுடன் நெருக்கம்
திமுகவின் செல்லப்பிள்ளை என்று கூறப்படும் பீட்டர் அல்போன்சை தமிழக காங்கிரசின் அடுத்த தலைவராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் உலா வரத் தொடங்கி உள்ளன. அதே நேரத்தில் டிடிவி தினகரனிடம் தற்போதைய காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காட்டிய திரைமறைவு நெருக்கமே காரணம் என்று மற்றொரு தகவலும் உலா வந்து கொண்டிருக்கிறது.
அரசியல் நோக்கர்கள்
திமுக, காங்கிரசின் தேர்தல் கூட்டணி கணக்கீடு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மற்ற கட்சிகளின் நிலை என்பது தெளிவில்லாத நிலையை காட்டுகிறது. அதிமுக, பாஜகவின் ஆக்டோபஸ் வலையில் சிக்கி தவித்து வருவதாக கூறும் அரசியல் நோக்கர்கள்... விடாது கருப்பு போல கருத்துகளை முன் வைத்து வருகின்றனர். வரக்கூடிய தேர்தலில் திமுக எக்காரணம் கொண்டும் ஜெயித்துவிடக்கூடாது என்பதில் அத்தனை உறுதியான நிலைப்பாட்டில் அதிமுகவும், பாஜகவும் உள்ளது. தற்போது அதிமுக, டிடிவியின் அமமுக என பிரிந்து சென்றிருப்பதை சுட்டிக்காட்டும் அதிமுகவின் நலன் விரும்பிகள் இணைப்பை அவ்வப்பொழுது சுட்டிக்காட்டி வருகின்றனர்.
அரசியல் விமர்சகர்கள்
பாஜகவின் கூட்டணி நெருக்கடி, அரசியல் ரீதியான தொடர் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் தை மாதம் இணைப்பு என்ற தகவல்களும் இறக்கை கட்டி பறந்து வருகின்றன. இணைப்பு மற்றும் அதற்கான பேச்சுவார்த்தை விவரங்களை பற்றிய தகவல்களும் உலா வந்து கொண்டிருக்கின்றன. வரும் தை 1ம் தேதி அதிமுகவுடன் அமமுக இணையப் போகிறது என்ற தகவல்கள் கசிந்து கொண்டிருக்கிறது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக தற்போதைய நிலை குறித்து தருமபுரி ஒகேனக்கலில் பேசியதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிந்திக்க வேண்டும்
அவர் பேசியது இதுதான்.... அதிமுக தற்போது பலம் இழந்து காணப்படுகிறது. வரக்கூடிய தோ்தலில் அக்கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். தோ்தலுக்கு முன்னா் கட்சித் தலைவா்கள் இதனை உணா்ந்து இணைப்பு குறித்து சிந்திக்க வேண்டும்... இது தான் தங்கதமிழ்ச்செல்வன் பேசிய கருத்துகள். அமமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் சமீபத்தில் திமுகவில் ஐக்கியமானார். அவரின் விலகலும் அமமுகவை பலவீனப் படுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இனியும் கட்சியிலிருந்து ஒருவர் விலகி எதிர் முகாமான திமுகவில் சேர்ந்துவிடக் கூடாது என்பதால், அதிமுக,அமமுக இணைப்பு பற்றி திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சசிகலா பொதுச்செயலாளர்?
ஆனால் அதில் முக்கிய அஜெண்டாவாக டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதை சசிகலா ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் பின்னர் சசிகலா பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு கட்சியையும், ஆட்சியை பின்னணியில் இருந்தும் வழிநடத்துவார் என்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
பொதுக்கூட்ட பேச்சு
அதனை நன்கு உணர்ந்து கொண்டுதான், வரும் தேர்தல்களில் அமமுக தலைமையில் கூட்டணி என்று முழங்கி வந்த டிடிவி தினகரன் தமது நிலைப்பாட்டை மாற்றியது. 2 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் டிடிவி பேசிய போது, வரும் தேர்தல்களில் அம்மா வழியில் தனித்தே போட்டி என்று அறிவித்ததும் அதன் பின்னணி தான் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆனால் உலா வரும் இந்த தகவல்களில் நடக்கப்போவது எது என்பதை அடுத்து வரக்கூடிய அரசியல் திருப்பங்களே முடிவு செய்யும் என்பதே நிதர்சனமான உண்மை.