ஆடு வாங்க வந்தீங்களா.. அப்போ ஒரு ஆட்டம் போடுங்க.. போலீஸ் செய்த கெடுபிடி! தீயாக பரவும் வீடியோ பின்னணி
சென்னை: கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ தீயாக பரவி வருவதை பார்த்து இருப்பீர்கள். ஆடு வாங்க வந்ததாக பொய் சொன்ன இளைஞரை போலீசார் ஆட விட்டு எடுத்த வீடியோதான் அது.
அதுவும் சும்மா ஆடவில்லை.. ஆடாமல் ஆடுகிறேன்.. பாடாமல் பாடுகிறேன்.. ஆண்டவனை தேடுகிறேன்.. வா, வா, வா என்ற பழைய பாடலை ஒலிக்க விட்டு, சிட்டுவேஷனுக்கு ஏற்ப ஆடியுள்ளார் அந்த இளைஞர்.
ஆடு வாங்கபோவதாக சொன்னார்
இந்த நிலையில்தான், போலீசார் அந்த இளைஞருக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளனர். ஆடு வாங்க போறதுக்கு முன்னாடி ஒரு ஆட்டத்தை போட்டுட்டு போப்பா ராஜா என செல்லமாக அதட்டியுள்ளனர் போலீசார். அவ்வளவுதான்.. கால் ஆட்டம் கண்டுவிட்டது அந்த இளைஞருக்கு. போதாத குறைக்கு செல்போனில் போலீசார் பாட்டை வேறு போட்டு ஆடச் சொல்லியுள்ளனர்.
ஆட்டம்
ஆயிரத்தில் ஒருவர் திரைப்படத்தில் இடம் பெற்ற, ஆடாமல் ஆடுகிறேன் என்று துவங்கும் பாடலை போலீசார் செல்போனில் ஒலிக்க விட்டுள்ளனர். அந்த பாட்டுக்கு ஏற்ப வளைந்து வளைந்து ஆடியுள்ளார் இந்த இளைஞர். இதை போலீசாரே வீடியோவாகவும் எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாக சுற்றி வருகிறது.
அது போன வருஷம்
இதுகுறித்து விசாரித்து பார்த்தபோது, இந்த வீடியோ போன வருடம் போடப்பட்ட முழு லாக்டவுன் காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரியவந்தது. இப்போதைய ஊரடங்கில் எடுத்ததை போல அந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.
நூதன தண்டனை ஏன்
இருப்பினும் காவல்துறை இதுபோன்ற நூதன தண்டனைகளை கொடுப்பது சரியில்லை என்று, ஒரு கருத்தும் சமூக வலைத்தளங்களில், முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் இது தனி மனித உரிமையை மீறும் செயல் என்றும், சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி மட்டுமே காவல்துறை செயல்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள் மக்கள்.