மெல்லிய தேகம், வெள்ளை சட்டை, ப்ளூ ஜீன்ஸ்.. கருணாநிதி இப்படி இருந்திருப்பாரோ.. அன்பில் மகேஷ் ஏக்கம்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி ஜீன்ஸ் பேண்டும் சர்ட்டும் அணிந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்ற ஏக்கம் இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திமுகவில் உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்படுவதாக சொந்த கட்சியினரே அங்கலாய்த்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. உதயநிதி கட்சிக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே இளைஞரணித் தலைவர் பதவி, எம்எல்ஏ சீட் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அவரை அமைச்சரவையில் இடம் பெற செய்ய வேண்டும் என மூத்த அமைச்சர்களும் உதயநிதியின் சகாக்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் உதயநிதியோ தான் எப்போதும் மக்களுக்கும் அரசுக்கும் பாலமாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு அமைச்சர் பதவியெல்லாம் வேண்டாம் என்கிறார்.
ஆசிரியர்களுக்கு தொல்லை தந்தால்...டிசியில் கை வைப்போம்...மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை
உதயநிதிக்கு முக்கியத்துவம்
உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறி திருச்சி சிவா மகன் சூர்யா பாஜகவில் இணைந்தார். மேலும் உதயநிதிக்கு எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் நிர்வாகிகளும் துதி பாடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் உதயநிதியை பார்ப்பதற்கு கருணாநிதியின் இளவயது போல் இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அன்பகம்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திராவிடச் சுடர் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட, அதை தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன் பெற்றுக் கொண்டார்.
பள்ளிக் கல்வித் துறை
அப்போது பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஷ் பேசுகையில் மாணவரணி மாநாட்டை துவக்கி வைத்தது யார் என பார்த்தால், ஒரு மெல்லிய உருவம், ப்ளூ கலர் ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை நிற சட்டை, அதில் இளைஞரணி என லோகோ போட்டுள்ளது. அரங்கில் அத்தனை பேர் அமர்ந்திருக்க அவர் வந்து தனது பேச்சை துவக்கி வைக்கிறார்.
இளம் வயதில் கருணாநிதி
இதை பார்க்கும் போது இளம் வயதில் கருணாநிதி ஜீன்ஸ் பேண்டும் சர்ட்டும் போட்டிருந்தால் இப்படிதான் இருந்திருப்பாரோ என ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி பேசிய உரை எழுச்சிமிக்கதாக உள்ளது. உதயநிதியின் பேச்சையே புத்தகமாக போட வேண்டும். இதை இளைஞரணியினர் எடுத்து செய்ய வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது என்றார்.