எடப்பாடி போட்டோவே இருக்கட்டும்.. மாற்றுவதற்கு ரூ.13 கோடி வீண் செலவு வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: புத்தக பையில் முந்தைய முதலமைச்சர்கள் புகைப்படம் இருந்து விட்டு போகட்டும், அதை மாற்ற ரூ.13 கோடி செலவு செய்ய வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. பிறகு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதன் தொகுப்பு இதோ:

தலைமையாசிரியர் ஸ்டாலின்
சட்டசபையில் சபாநாயகர் தாளாளர் ஆக செயல்படுகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை ஆசிரியராக இருந்து வழி நடத்துகிறார். இந்த அவையில் இருப்பது எனக்கு பெருமை. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியாயத்திற்கு மட்டும் கோபப்படும் ஆங்கிரி பேர்ட் (Angry bird) என்றுதான் நாங்கள் அழைத்து வருகிறோம்.

மக்கள் வரிப்பணம்
பள்ளிக் கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணம் ரூ.32,599.54 கோடி. இவை மக்களின் வரிப்பணம். எனவே, அதை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். கற்றல் திறனை அதிகரித்து இடைநிற்றலை குறைப்பது முக்கிய பணியாக மேற்கொள்ள உள்ளோம்.

கற்றல் திறன்
மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண் எடுத்தாலும், கற்றல் திறனில் மிகவும் குறைவாக இருக்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது. கற்றல் திறனில் நாட்டிலேயே 23வது மாநிலமாக நாம் இருக்கிறோம். இதை 10 இடத்திற்குள் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். கற்றல் திறனை அதிகரிக்க ரூ.213.6 கோடி நிதியில் கற்றல் கற்பித்தல் இயக்கம் தொடங்கப்பட உள்ளது.

ஸ்போக்கன் இங்கிலீஷ்
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை, பள்ளி முடிந்த பிறகு 6,7,8 ஆகிய மாணவர்களுக்கு தனியாகவும், 9,10,11,12 ஆகிய மாணவர்களுக்கு தனியாகவும் நடத்த முடிவு செய்து அது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம். தமிழ் கல்வியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு ரொம்பவே சிரமப்படுவதை கருத்தில் கொண்டு இந்த திட்டம் உள்ளது.

எடப்பாடி புகைப்படங்கள்
கடந்த 10 ஆண்டில் (அதிமுக ஆட்சி காலத்தில்) கல்வித் துறைக்கு 9 அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இந்த துறையை, மியூசிக்கல் சேர் போல விளையாடியிருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 65 லட்சம் விலையில்லா புத்தகப் பைகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில், முன்னாள் அதிமுக முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதுகுறித்து குறித்து, முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்ட போது, இந்த புத்தக பைகளை வாங்க 13 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இது மக்களின் வரிப்பணம், 13 கோடி ரூபாய் இருந்தால் அதை பள்ளி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வேறு திட்டம் செயல்படுத்துவேன். அந்த புத்தகப்பையில் அவர்களின் படமே இருந்துவிட்டுப் போகட்டும், என பெருந்தன்மையுடன் பேசி விட்டுக்கொடுத்தார். இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பொதுவாக ஆட்சி மாறும்போது முந்தைய முதல்வர்களின் அடையாளங்களை அழித்துவிட்டு தங்கள் அடையாளங்களை புகுத்துவது வழக்கம். ஆனால் ஸ்டாலின் அதைச் செய்யவிரும்பவில்லை என்பது அமைச்சர் பேச்சின் மூலம் உறுதியாகிறது.












Click it and Unblock the Notifications