வாணியம்பாடி சம்பவத்தால் வேதனை.. இதுபோன்ற நிகழ்ச்சிகளை அரசு தடை செய்ய வேண்டும் - அன்புமணி வேண்டுகோள்!
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : வாணியம்பாடியில் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த நிலையில், முறைப்படுத்தப்படாத உதவி வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தொண்டு நிறுவனம் சார்பாக நடைபெற்ற உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிர் இழந்திருப்பதற்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உதவி வழங்கும் இடத்தில் ஒரு நேரத்தில் 200 பேருக்கு மேல் கூட அனுமதிக்கக்கூடாது. மக்கள் வரிசையில் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.
2026ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி! யு டர்ன் அடித்த அன்புமணி! யூகங்களுக்கு முற்றுப்புள்ளி!
வாணியம்பாடி கூட்ட நெரிசல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொழிலதிபர் வழங்கவிருந்த இலவச வேட்டி, சேலைக்கு டோக்கன் பெறுவதற்காக திரண்ட கூட்டத்தில் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய 4 பெண்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வயதான 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதிகரித்து வருகிறது
இந்நிலையில், இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் நடத்தப்பட்ட இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும், அதில் ஏற்படும் நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் உயிரிழப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
காவல்துறையின் பாதுகாப்பு அவசியம்
இத்தகைய நிகழ்வுகளும் உயிரிழப்புகளும் தடுக்கப்பட வேண்டும்! பொதுமக்களுக்கு மனித நேயத்துடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், அவை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செய்யப்படவேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத சூழலில் நெரிசல் ஏற்படுவதும், உயிரிழப்புகள் நிகழ்வதும் தவிர்க்க முடியாதவை! எத்தகைய உதவிகள் வழங்கப்படுவதாக இருந்தாலும், அரசின் அனுமதி பெற்று, காவல்துறையின் பாதுகாப்புடன் வழங்கப்பட வேண்டும்.
தடை செய்ய வேண்டும்
உதவி வழங்கும் இடத்தில் ஒரு நேரத்தில் 200 பேருக்கு மேல் கூட அனுமதிக்கக்கூடாது. மக்கள் வரிசையில் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்! முறைப்படுத்தப்படாத உதவி வழங்கும் நிகழ்ச்சிகளை அரசு தடை செய்ய வேண்டும். வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.