அதிகாரத் திமிர்ல ஆடாதீங்க.. ‘ரைட் ஹேண்ட்’ அமர் பிரசாத் ரெட்டி கைதால் வரிந்து கட்டி வந்த அண்ணாமலை!
சென்னை: அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் அமைந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் அருகே 50 அடி உயர கொடிக் கம்பத்தில், பாஜக கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு பாஜக ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு ஜேசிபி உடன் வந்தனர்.

அப்போது பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் திமுக அரசுக்கு எதிராக கோஷமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்ற கொண்டு வந்த ஜேசிபி இயந்திரத்தையும் கற்களை கொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர். இதையடுத்து அங்கு ரகளையில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அவர்கள் மீது அரசு சொத்தை சேதப்படுத்தி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. ஜேசிபியின் கண்ணாடி உடைத்த வழக்கில், கன்னியப்பன், பாலமுருகன், செந்தில் குமார், சுரேந்திர குமார், வினோத்குமார், மற்றும் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக அரசை தொடர்ச்சியாக விமர்சித்து வந்ததாலும், அண்ணாமலையின் பாதயாத்திரையை முடக்கும் நோக்கிலும் அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்துள்ளதாக பாஜகவினர் விமர்சித்துள்ளனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, "தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி அவர்களையும், தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் சுரேந்திர குமார், பாலகுமார், கன்னியப்பன், வினோத் குமார், செந்தில் குமார் ஆகியோரையும், காவல்துறையை ஏவி கைது செய்திருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஊழலில் கொழுத்த நபர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, திமுகவின் சீர்கெட்ட ஆட்சியை விமர்சிக்கும் ஒரே காரணத்துக்காக பாஜகவினரைப் பழி வாங்கும் திமுகவின் போக்கு நெடுங்காலம் நீடிக்காது. அதிகாரத் திமிரிலும், ஆணவத்திலும் ஆடிக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications