அண்ணாமலை இப்போது போலீஸ் இல்லை.. கெட் அவுட் வார்த்தைக்கு உகந்தவர் அவர்தான்.. சேகர்பாபு பதிலடி
சென்னை: கெட் அவுட் என்ற வார்த்தைகளுக்கு பிரதமர் மட்டுமே உகந்தவர் என்று அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். அண்ணாமலை இப்போதும் கர்நாடகா போலீஸ் என்ற நினைத்து கொண்டிருப்பதாக கூறிய அவர், மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் வார்த்தைகளே அவரின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக விமர்சித்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரை ஒருமையில் பேசிய வீடியோ ட்ரெண்டாகியது. இதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என் வீட்டில் போஸ்டர் ஒட்டுவதாக அண்ணாமலை கூறியிருந்தார். அண்ணா அறிவாலயத்திலும் ஏதோ செய்வேன் என்றார்.

அவர் தைரியமிருந்தால் அண்ணா சாலை பக்கம் வரட்டும். மத்திய அரசிடம் பேசி நிதி வாங்கி கொடுக்க முடியவில்லை, அவர் சவால் விடுகிறார் என்று காட்டமாக பதில் அளித்தார். இதன்பின், அண்ணாமலை தரப்பில் எந்த நாள், நேரம், இடத்தை சொல்லுங்கள்.. அண்ணாசாலைக்கு வருகிறேன் என்று பதில் அளித்தார். இதனிடையே எக்ஸ் தளத்தில் கெட் அவுட் மோடி என்று திமுகவினர் ட்ரெண்ட் செய்தனர்.
அதுமட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் திமுகவினர் மொத்தமாக கெட் அவுட் மோடி என்று கோஷம் எழுப்பி அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கெட் அவுட் ஸ்டாலின் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன்பின் பாஜகவினர் அந்த ஹேஷ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அண்ணாமலை கர்நாடகாவில் போலீஸாக இருந்ததை போல் இப்போது நினைத்து கொண்டிருக்கிறார். அவர் போலீஸ் இல்லை. அண்ணா சாலையில்தான் அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லை பிடுங்கும் வரை ஓய மாட்டேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
தெம்பு இருந்தால், திராணி இருந்தால், தைரியம் இருந்தால் அண்ணாசாலையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் ஒரு செங்கல்லையாவது தொட்டு பார்க்கட்டும். ஓர் அண்ணாமலை என்ன.. ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் நடக்காது. கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் எல்லாம் பிதற்றலோடு கூறி திரிவதை திமுக அனுமதிக்காது.
அண்ணா அறிவாலயத்திற்கு அவர் திமுகவில் இணைய வரலாம், திமுக தலைவர்களுடன் நட்பு பாராட்ட வரலாம்.. ஆனால் அண்ணா அறிவாலய செங்கல்லை பிடுங்குவேன் என்பவரை எப்படி அனுமதிக்க முடியும். பொன்.ராதாகிருஷ்ணன் மீது மரியாதை உள்ளது. அவரின் எண்ணங்களை இந்த வார்த்தைகள் பிரதிபலிக்கிறது. ஏற்கனவே கோபேக் மோடி என்பதை பாஜக அனுபவித்தது. மீண்டும் அவர்களே கையில் எடுத்துள்ளார்கள். தற்போது கெட் அவுட் என்ற வார்த்தைகளுக்கு பிரதமர் மட்டுமே உகந்தவர் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications