முட்டும் இபிஎஸ்..மோதும் ஓபிஎஸ்! ஆதரவு யாருக்கு? ’மேல’ இருக்கவங்க பாத்துப்பாங்க..அண்ணாமலை சொன்ன பதில்
சென்னை : ஈரோடு இடைத்தேர்தல் களமானது சூடு பிடித்திருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது பிரச்சாரத்தை தொடங்கி விட்டது. ஆனால் அதிமுகவில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவு எடப்பாடி ஓபிஎஸ் என்பதே குழப்பமாக இருக்கும் நிலையில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்திருக்கிறார்.
கூட்டணி என்றாலே அதற்கு தலைமை வகிக்கும் கட்சிக்கு பிற கட்சிகள் ஆதரவளிப்பது தான் வழக்கம். ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது என அந்த கட்சியினரே கூறியிருக்கின்றனர்.
கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் நேரடியாக சென்று ஆதரவு கோரி வருகின்றனர். அதிமுக தலைவர்கள் அதிமுக ஆதரவு இருக்கிறது. ஆனால் அதன் இரு தலைவர்களான ஓபிஎஸ் இபிஎஸ்க்கு என இருவரில் யாருக்கு ஆதரவளிப்பது தான் தற்போது சிக்கல்.

ஈரோடு தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மறைவை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் ஆனது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே மீண்டும் அந்த தொகுதியில் களம் காண்கிறது. வேட்பாளர் யார் என்பது இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவும் கோதாவில் குதித்துள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. மேலும் அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாமக யாருக்கும் ஆதரவு இல்லை என ஒதுங்கிக் கொண்டது.

அதிமுக மோதல்
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்தித்து தங்களுக்கு தரப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பூவை ஜகன் மூர்த்தி, ஜான்பாண்டியன், ஜிகே வாசன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினர். அதேபோல ஓ.பன்னீர்செல்வம் தங்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார். ஜிகே வாசன் யாருக்கு ஆதரவு என வெளிப்படையாக அறிவிக்காத நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஜான்பாண்டியன் இரட்டை இலை சின்னம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்குத்தான் ஆதரவு எனக் கூறியிருக்கிறார்.

நிர்வாகிகள் தீவிரம்
இப்படி இருக்கும் நிலையில் நேற்று மாலை 3 மணியிலிருந்து பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை அதிமுக நிர்வாகிகள் முற்றுகையிட தொடங்கினர். முதல் எடப்பாடி தரப்பும் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்களான எச். ராஜா நாராயணன் ஆகியோரை சந்தித்து தேர்தலில் தங்கள் தரப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அண்ணாமலை
முன்னதாக அண்ணாமலை வருகைக்காக கமலாலய வாசலில் அதிமுகவுடன் காத்திருந்ததாகவும் 15 நிமிடங்களுக்குள் சந்திப்பு முடிந்து விட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தது. இதனால் அதிமுகவை பலரும் விமர்சித்து வரும் நிலையில் தற்போது அந்தக் கட்சி யாருக்கு ஆதரவளிக்க போகிறது அல்லது அந்த கட்சி தேர்தலில் களம் இறங்கப் போகிறதா என்பது குறித்தான எதிர்பார்ப்புகள் இருந்திருக்கிறது. இந்த நிலையில் தான் அதிமுகவில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.

ஆதரவு யாருக்கு?
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதா அல்லது போட்டியிடுவதா என்பது குறித்து எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. தேசிய தலைமை முடிவு செய்த பிறகு நாளை கண்டிப்பாக செய்தியாளர்களை சந்தித்து கூறுகிறேன் எனக் கூறியிருக்கிறார். இதனால் இந்த விவகாரத்தில் பாஜக தலைமை ஆலோசனை நடத்தி வருவதாக அண்ணாமலையின் பேச்சிலிருந்து தெரிய வருகிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications