"மிட்நைட்டில்" வெளியே ஓடிய சரவணன்.. பின்னாடியே நயினாரா?.. அடுத்து "அவரா".. யூகங்களும் + வியூகங்களும்
விபி துரைசாமி, நயினார் நாகேந்திரன் பாஜகவில் அதிருப்தியில் உள்ளனனரா
சென்னை: டாக்டர் சரவணன், பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, வேறு சில பரபரப்புகள் திமுக & பாஜக இடையே வட்டமடித்து கொண்டிருக்கிறது.
பிடிஆர் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்தையடுத்து, அடுத்தடுத்த சலசலப்புகள் மதுரையில் நிகழ்ந்தன.. காலையில் பிடிஆர் மீது பாய்ந்த டாக்டர் சரவணன், அடுத்த 12 மணி நேரத்திலேயே பிடிஆரை இரவோடு இரவாக சந்தித்து சந்தித்து மன்னிப்பு கேட்டுள்ளார்..
நடந்த சம்பவத்தினால் தூக்கமே வராமல் தவித்ததாகவும், அதனால் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்யவே பிடிஆரிடம் வந்ததாகவும் கூறி, பாஜகவில் இருந்து விலகுவதாக, அப்போது செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

ராதாரவி
பொதுவாக, ஒருவர் அரசியலில் கட்சி மாறுவது இயல்பு.. அதற்கு ராதாரவி முதல் எஸ்வி சேகர், செந்தில்பாலாஜி என எத்தனையோ பேர் உதாரணங்களாக உள்ளனர். ஆனால், ஒருவர் ஒரே கட்சிக்கு 3 முறை தாவி, தாவி சென்றதுதான், சரவணன் விஷயத்தில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.. அதேசமயம், சரவணனின், கட்சி விலகல் திட்டமிட்ட ஒன்று என்றும் பாஜகவினர் சொல்லி வருகிறார்கள்.. திமுகவில் தான் இணையவேண்டும் என்பதை நீண்ட நாள் முன்பே எடுத்துவிட்டதாகவும், அதனை இந்த நேரத்தில் சரியாக பயன்படுத்திக்கொண்டதாகவும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.

சங்கடம்
இப்படி ஒரு பரபரப்பு அடங்கும் முன்னேயே, இன்னொரு பரபரப்பை இணையத்தில் கிளப்பி விட்டுள்ளனர்.. அந்தவகையில், திமுகவில் இருந்து பாஜகவுக்கு போன விபி துரைசாமி, மற்றும் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு போன நயினார் நாகேந்திரன் இருவரும்கூட, சரவணனை பின்தொடர்ந்து வெளியே வரலாம்.. அவர்களும் அதிருப்தியில்தான் இருக்கிறார்கள்.. இதற்கு பாஜகவில் அவர்கள் சந்தித்த சில 'தர்மசங்கடங்களே' என்றும் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.

மேஜர் காரணம்
விபி துரைசாமியை பொறுத்தவரை, திமுகவில் மிகப்பெரிய செல்வாக்குடன் வலம் வந்தவர்.. ஆனால், திமுகவிலிருந்து விலகி பாஜகவுக்குச் சென்றவுடனேயே மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.. மாற்று கட்சியில் இருந்து வந்த ஒருவருக்கு மிகப்பெரிய பதவியை பாஜக தந்து அழகு பார்த்தது என்றாலும், அதற்கு பிறகு விபி துரைசாமிக்கான முக்கியத்துவம் கட்சிக்குள் குறைந்துவிட்டது என்றே சொல்லப்பட்டது.. இந்த அதிருப்தி துரைசாமிக்கே இருந்து வந்ததை மறுக்க முடியாது.

மைக் + வீடியோ
சமீபத்தில்கூட வள்ளுவர் கோட்ட பாஜக ஆர்ப்பாட்டத்தில், மைக்கை எடுத்து துரைசாமி பேசும்போது, அவரை பேசவிடாமல் இடையூறு செய்து முழக்கமிட்டபோதும் சரி, அதே மேடையில், எம்.ஆர்.காந்தியின் தோளில் கைவைத்தபோது, ஆத்திரமடைந்த எம்.ஆர்.காந்தி போராட்ட மேடை என்றும் பார்க்காமல், துரைசாமியின் கையை அடித்து தட்டிவிடும்போது சரி, அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானதையும் மறுக்க முடியாது.. இந்த அதிருப்திகளை களையும் விதமாகவும், விபி துரைசாமியின் தேவை வரப்போகும் தேர்தலில் தவிர்க்க முடியாது என்பதற்காகவும், துணைப் பொதுச்செயலாளர் பதவி அவருக்கு தரப்பட்டதாகவும் சொல்லப்பட்டது..

போச்சு.. போச்சு
ஆனாலும், பலவித சங்கடங்களுடன் பாஜகவில் துரைசாமி இருப்பதாகவே கூறப்படுகிறது.. அதேபோல, "துரைசாமியை திமுக கை நழுவ விட்டிருக்க கூடாது" என்ற ஆதங்கம் இன்றுவரை நிலவி வருவதையும் மறுக்க முடியாது... இதில் இன்னொரு பெயராக அடிபடுவது, அதிமுகவின் முக்கிய அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன்.. அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.. எடுத்த எடுப்பிலேயே துணைத்தலைவர் பதவியை தந்தது பாஜக.. எம்பி தேர்தலிலும் சீட் கொடுத்தது.

பொன்.ராதா
ஆனால் நயினாருக்கோ, மாநில தலைமை பதவி காலியாக இருந்தபோது, அதன் மீது ஒரு கண் இருந்ததாகவும்,
குறிப்பாக, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையேதான் பலத்த போட்டியே இருந்ததாகவும் அப்போது சலசலக்கப்பட்டது. பிறகு நிர்வாகிகள் மாற்றத்திலாவது தனக்கு பெரிய பொறுப்பு அதாவது பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.. ஆனால், அதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. பிறகு பாஜக சட்டமன்ற குழு தலைவர் பதவியை நயினாருக்கு தந்தது என்றாலும், பாஜகவின் கொள்கை, கோட்பாடுகள் நயினாருக்கும் நெருடலை தந்து வருவதாக சொல்கிறார்கள்..

DRAVIDIAN STOCK
அதுமட்டுமல்ல, நீட் விவகாரத்தில்கூட, தமிழக மக்களின் ஆதரவுக்கு குரல் என்றுதான் நயினார் பேசியிருந்தார்.. இப்படி பேசியதுகூட, பாஜக மீதான தன்னுடைய அதிருப்தியின் வெளிப்படாகவே பார்க்கப்பட்டது. ஆக, நயினாரும் சரி, விபி துரைசாமியும் சரி, 2 பேருமே திராவிட முகம்தான்.. திராவிட ஸ்டாக்தான்.. (DRAVIDIAN STOCK).. அப்படி இருக்கும்போது, பாஜகவின் சித்தாந்தங்கள் அனைத்திலுமே இவர்கள் உடன்படுகிறார்களா? என்பது தெரியவில்லை.

நெருடல் + சங்கடம்
அதேசமயம், விபி துரைசாமி திமுகவிடமுடம், நயினார் அதிமுகவிடமும் எப்போது வேண்டுமானாலும், தாவுவார்கள் என்ற தகவல்களும் 2 வருடங்களாகவே கசிந்து கொண்டிருக்கிறது.. இப்போது சரவணன் வெளியேறியதும், இந்த முணுமுணுப்பு அதிகமாகிவிட்டது.. இதெல்லாம் உண்மையா? அல்லது வேண்டுமென்றே கிளப்பப்படும் ஒன்றா? அல்லது மறுபடியும் வெறும் வதந்திகளாகவே அமுங்கிவிடப் போகின்றனவா தெரியவில்லை.. பார்ப்போம்..

நயினார் பேட்டி
முன்னதாக, மதுரையில் நடந்த சம்பவம் குறித்து, செய்தியாளர்கள் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.. அதற்கு அவர், "தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு விஷயங்களில் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகின்றார்... ஜிஎஸ்டி கவுன்சிலில் கலந்துக்கொண்டு அங்கு ஒரு தகவலை தெரிவித்துவிட்டு இங்கு வந்து ஒரு தகவல்களை தெரிவித்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார் என்று கடுமையாக சாடினார். அதேபோல, விபி துரைசாமி விடாமல் அதிமுகவை சாடி வருகிறார்..

விபி துரைசாமி
"தமிழகத்தில் 67 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தும், அதிமுக எதிர்கட்சியாக செயல்படவில்லை.. ஆனால், வெறும் 4 சட்டமன்ற உறுப்பினர் வைத்து கொண்டு பாஜக எதிர்கட்சியாக அனைத்து கேள்விகளையும் முன் வைக்கிறது" என்றார்.. நயினாரும் சரி, விபி துரைசாமியும் சரி, திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து, பாஜகவுக்கு சாதகமாகவே இதுவரை பேசி வருகிறார்கள்.. அவர்கள் தரப்பில் இருந்து எந்தவிதமான அதிருப்தி கருத்துக்களும் எழவில்லை என்றாலும், இவர்கள் 2பேர் மீதான சலசலப்புகளும், முணுமுணுப்புகளும் மட்டும் ஓயாமல் உள்ளது.. அதேசமயம், இவர்கள் எப்போது தங்கள் தாய்க்கட்சிக்கு திரும்பினாலும், திமுகவும், அதிமுகவும் வரவேற்கவும் தயாராக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications