28,000 சத்துணவு மையங்களை மூடுகிறோமா? அதெல்லாம் வடிகட்டிய பொய்! திடமாய் மறுக்கும் அமைச்சர் கீதாஜீவன்!
சென்னை: 28,000 சத்துணவு மையங்களை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக உலவும் செய்தி பொய்யானது என்றும் சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது எனவும் அமைச்சர் கீதா ஜீவன் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் காலை உணவுத் திட்டம் முதலமைச்சர் அலுவலகத்தின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
சத்துணவு மையங்கள் விவகாரம் தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன்! பாஜக ஆளும் மாநிலங்களையே பின்னுக்கு தள்ளிய தமிழகம்! நாம் தான் டாப் 1!
சத்துணவு மையங்கள்
தமிழ்நாட்டில் தற்போது 43,190 பள்ளி சத்துணவு மையங்களில் சுமார் 46.00 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விபரங்களின் அடிப்படையில், தற்போது சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை ஆய்வு செய்து, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் குறித்து அனைத்து புள்ளி விபரங்களும், கோரப்பட்டுள்ளன.
மூடும் பேச்சுக்கே இடமில்லை
28,000 சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிடப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளிவந்துள்ளது. சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது. பள்ளி, சத்துணவு மையங்களில் எண்ணிக்கை அல்லது பணியாளர்களின் எண்ணிக்கையினை குறைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
சத்துணவுத் திட்டத்தை வலுப்படுத்துவோம்
சத்துணவுத் திட்டத்தை வலுப்படுத்திடவும், தொடர் கண்காணிப்பு செய்திடவும் தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் யாருக்கும் எந்தவொரு ஐயமும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை. முதலமைச்சர் அவர்கள் மாணவர்களின் நலனுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், அவர்களின் கல்வித் திறனை அதிகரிப்பதற்காகவுமே காலை உணவுத் திட்டத்தை தொடங்கி உள்ளார்கள். அத்திட்டம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முதல்வர் அலுவலகம்
காலை உணவுத் திட்டம் முதலமைச்சர் அலுவலகத்தின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது மட்டுமில்லாமல் "வரும் ஆண்டில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்" என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். அப்படியிருக்க சத்துணவுத் திட்டத்துறையில் உள்ள சத்துணவு மையங்களை எப்படி அரசு மூட முயற்சி எடுக்கும். சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடவும், சத்தான உணவை முறையாக மாணவர்களுக்கு வழங்கிடவும், தொடர் கண்காணிப்பை வலுப்படுத்திடவுமே அரசு திட்டமிட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.