கரூர் குரூரம்! தவெக நிர்வாகிகள் யாரும் என்னை சந்திக்கவில்லை! ஆடிட்டர் குருமூர்த்தி மறுப்பு
சென்னை: கரூர் சம்பவத்தால் தவெக நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் பாஜகவை சேர்ந்த முக்கிய புள்ளியான ஆடிட்டர் குருமூர்த்தியை விஜய்யும், தவெக நிர்வாகிகளும் சந்தித்ததாக தகவல்கள் கிடைத்த நிலையில் அதை ஆடிட்டர் குருமூர்த்தி மறுத்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தால் தவெக நிர்வாகிகள் மீது பலர் குற்றம்சாட்டி வருகிறார்கள். அதிலும் விஜய், கரூரிலேயே இருக்காமல் அவசர அவசரமாக சென்னை வந்ததும் பேசுபொருளானது.

மேலும் கரூர் கூட்டம் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனிடம் போலீஸார் கூறியும் பல்வேறு விதிகளை அவர்கள் மீறியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் மூவர் மீதும் ஜாமீனில் வெளியே வராதபடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் தலைமறைவாக இருக்கும் மூவரையும் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கரூர் சம்பவம் நடந்த போது இறந்த மக்களின் உறவுகளை நேரில் கூட சந்திக்காமல், குறைந்தபட்சம் கரூரிலேயே மக்களோடு மக்களாக இருக்காமல் விஜய் இரவோடு இரவாக சென்னைக்கு வந்துவிட்டார். நீலாங்கரை வீட்டில் இருந்த விஜய், கடந்த இரு தினங்களாக யாரையும் சந்திக்கவில்லை.
எந்த சேனலை திறந்தாலும் எந்த செய்தித்தாளை பிரித்தாலும் கரூர் செய்திதான்! இதனால் தவெகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. அதிலும் தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் தனது பிரச்சாரங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு பாதுகாப்பு என மூச்சுபிடித்துக் கொண்டு பேசிய நிலையில் அவருடைய கூட்டத்திலேயே பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பு இல்லாமல் இறந்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் அறிக்கை கேட்டிருந்தனர். இந்த நிலையில்தான் இந்த நெருக்கடியை சமாளிக்க தமிழக பாஜகவின் முக்கிய புள்ளியாக இருந்து வரும் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்திக்குமாறு சிலர் விஜய் தரப்புக்கு ஐடியா கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆடிட்டர் குருமூர்த்தியை நேரில் சந்தித்த தவெக நிர்வாகிகள் நிலைமையை எடுத்துச் சொன்னபோது அதற்கு அவர் உதவுவதாக உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது. அதே வேளை இன்று பட்டினம்பாக்கம் இல்லத்திற்கு சென்ற விஜய்யை ஆடிட்டர் குருமூர்த்தியே நேரில் போய் சந்திக்க இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த கரூர் விவகாரத்தில் டெல்லி பாஜக தலைமை தலையிடுவதை அறிந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் முதல்வர் ஸ்டாலினிடமும் விஜய்யிடமும் பேசியதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தியோ, தவெக பிரதிநிதிகள் என்னை சந்திக்கவில்லை என மறுத்துள்ளார். அது போல் விஜய்யையும் தான் சந்தித்ததாக சொல்லப்படுவதும் உண்மையில்லை என ஆடிட்டர் குருமூர்த்தி மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications