ஆட்டோ டிரைவர் அண்ணாதுரை வேலை தேடும் இளைஞர்களுக்கு ரோல் மாடல் - சைலேந்திரபாபு ஐபிஎஸ் பாராட்டு
ஒரு சிறந்த ஆளுமை, அண்ணாத்துரையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். வேலை தேடும் இளைஞர்களுக்கு இவர் ரோல் மாடல். செய்யும் தொழிலே தெய்வம் என்று பதிவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு
சென்னை: வேலை தேடும் இளைஞர்களுக்கு இவர் ரோல் மாடல். ஒரு சிறந்த ஆளுமை, அண்ணாத்துரையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். செய்யும் தொழிலே தெய்வம் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.
Recommended Video
சென்னையைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை. தன்னுடைய ஆட்டோவில் இலவச வை-பை, நாளிதழ்கள், வார இதழ்கள், டிவி, என பயணிகளைக் கவர பல வசதிகளை வைத்திருக்கிறார். பணம் செலுத்த முடியாதவர்களுக்கு ஸ்வைப்பிங் மிஷன்.
அன்னையர் தினம், குழந்தைகள் தினம் ஆகிய தினங்களின்போது தள்ளுபடி விலையில் சவாரி என ஆச்சர்யங்களை சுமந்துகொண்டு ஐந்தாண்டுகளுக்கும் மேல் பயணிக்கிறது அண்ணாதுரையின் ஆட்டோ.
தஞ்சாவூர் அருகே பேராவூரணியில் பிறந்த அண்ணாதுரை சிறு வயதிலேயே சென்னையில் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். வறுமையால் இவரின் அப்பாவும், அண்ணாவும் ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு சென்றுள்ளனர். ஆனால் இவருக்கோ பிசினஸ் செய்ய ஆசை. இருப்பினும் வறுமையால் வேறு வழியின்றி அண்ணாதுரை ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வந்தார்.
தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அண்ணாதுரையின் மனதை விட்டுபோகவில்லை. தனது கஸ்டமர்களுக்கு எந்த ஆட்டோ டிரைவரும் கொடுக்காத வசதிகளை கொடுக்க வேண்டும் என்று இவர் எடுத்த முடிவுதான்.. அண்ணாதுரையை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
ஆட்டோ டிரைவர் அண்ணாதுரை தனது ஹைடெக் ஆட்டோவால் தற்போது பிரபலமாகியுள்ளார். அவரது ஆட்டோ சாதாரண ஆட்டோ போல கிடையாது சற்று வித்தியாசமான அம்சங்களை கொண்டது.இவரது கதை முதன் முதலில் ஹூயுமன்ஸ் ஆஃப் பாம்பே என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வெளியிட்டிருந்தது.
இவரது ஆட்டோவில் வாடிக்கையாளர்கள் எதிர்பாராத அனுபவத்தை வழங்க மாஸ்க், சானிட்டைசர், மினி-பிரிட்ஜ், ஐபேட், டிவி, பத்திரிக்கைகள் என பல வசதிகளை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார். இதற்காகவே இவருக்கு பல ஆயிரம் கஸ்டமர்கள் இருக்கிறார்கள். இவரின் இந்த பிஸ்னஸ் மாடல் பல பெரிய நிறுவனங்களை கவர்ந்து உள்ளது. ஆம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களாக வோடபோன், ஹூண்டாய், டொயோட்டா, ராயல் என்பீல்ட் போன்ற நிறுவனங்கள் கூட இவரை தங்கள் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து பேச வைத்து உள்ளன.
சில வாரங்களுக்கு முன்பு அண்ணாதுரையை பற்றி அறிந்த ஆனந்த் மஹிந்திரா அவரை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அண்ணாதுரையிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இவருடன் எம்பிஏ மாணவர்கள் ஒருநாள் செலவு செய்தால் அது மிகப்பெரிய Customer Experience Management பாடமாக அவர்களுக்கு அமையும் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையை தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, ஐபிஎஸ் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார். அவரைப்பற்றிய வீடியோவையும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வருகிறது 5 கோடி 'கோர்பிவேக்ஸ்' தடுப்பூசி! - அனுமதி அளித்த இந்திய மருந்துகள் கட்டுப்பாடு இயக்குனரகம்!
பன்னிரண்டாம் வகுப்புப் படிப்பை பாதியில் நிறுத்தி ஆட்டோ ஒட்டிய அண்ணாதுரை இன்று இந்திய அளவில் பெரிய பெரிய அளவில் பேசப்பட்டு கொண்டிருக்கிறார். படிப்பும் வேலையும் இரண்டாம்பட்சம்தான். ஈடுபடுகிற வேலையை அர்ப்பணிப்புடன் செய்தால் வெகுமதிகள் தேடிவரும் என்பதற்கு ஆகச்சிறந்த இன்னுமோர் உதாரணம் ஆட்டோ அண்ணாதுரை.