மகிளா காங்கிரஸ் தலைவி குறி வைக்கும் 3 தொகுதிகள்.. பரபரக்கும் திமுக கூட்டணி.. தேர்தல் களம் விறுவிறு!
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்கிறதா என்பதே இன்னும் பெரும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், 3 சட்டசபைத் தொகுதிகளை குறி வைத்து தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கி இருக்கிறார் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக தலைமை கூட்டணி விவகாரத்தை பக்குவமாக கையாண்டு வருகிறது.

சீண்டும் காங்கிரஸ் தலைவர்கள்
மாணிக்கம் தாகூர் எம்.பி, பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் திமுகவை கோபமூட்டும் வகையில் தொடர்ச்சியாக பேசி வந்தாலும், கூட்டணி விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மிகுந்த பொறுமை காத்து வருகிறார். இந்நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்பதில் உறுதியாக உள்ள மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ஹசினா சையத், 3 தொகுதிகளை குறி வைத்து தேர்தல் பணிகளை தொடங்கி இருக்கிறார்.
ஹசீனா சையத் எதிர்பார்ப்பு
உருது பேசக்கூடிய இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்க்கூடிய கிருஷ்ணகிரி, ஆம்பூர், ஆகிய 2 தொகுதிகள் மீது கண் வைத்திருக்கும் ஹசீனா சையத், சென்னை அம்பத்தூர் தொகுதியையும் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறாராம். கடந்த சட்டசபைத் தேர்தலிலேயே எம்.எல்.ஏ. சீட் எதிர்பார்த்த அவருக்கு அப்போதைய அரசியல் சூழலின் காரணமாக சீட் கிடைக்கவில்லை.
ஆனால் இந்த முறை மகிளா காங்கிரஸ் கோட்டாவில் தனக்கு எப்படியும் சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வரும் அவர், கிருஷ்ணகிரி, ஆம்பூர், அம்பத்தூர் ஆகிய 3 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு நிலவரங்கள் குறித்து அலசி ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொகுதி பங்கீடு
இதனிடையே தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் சீட் பங்கீடு தொடர்பாக எல்லா விவகாரங்களையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளன.
திமுக தலைமை, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை மேற்கொள்ள 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவினர், ஒவ்வொரு கட்சியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முதலில் சீட் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டு, அடுத்தடுத்த கட்டங்களில் எந்தெந்த தொகுதிகள் என்பவை அடையாளம் காட்டப்பட்டு அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications