பிஎப் 7 வைரஸ் பரவல்..மருத்துவமனைகளில் மருந்துகள் கையிருப்பு.. அச்சம் வேண்டாம்..மா.சுப்ரமணியன்
சென்னை: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே இன்றுமுதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் நாடுகளில் இருந்து தமிழக விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சீனாவில் பரவி வரும் பிஎப் 7 கொரோனா வைரஸ் உலக மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தினசரியும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளதால் இந்தியாவிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதில் முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சனிக்கிழமை முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறைக்கு, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அதில், வெளிநாடுகளில் இருந்து சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். மரபணு பரிசோதனை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பயணிகளை அவர்களின் நாடுகளின் அடிப்படையில் விமான நிறுவனங்களே தேர்வு செய்யலாம். அந்த பயணிகளிடம் இருந்து மாதிரிகளை சேகரித்த பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அந்த மாதிரிகளை மரபணு சோதனைக்காக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,
சீனா, ஜப்பான், ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களை ரேண்டமாக 2 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது.
தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் இன்று முதல் கொரோனா பரிசோதனை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் 6 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. படுக்கைகளை பொறுத்தவரை கடந்த கொரோனா காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனைகளில் ஆக்சிஜனை போதுமான அளவில் இருப்பில் வைத்திருக்க தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. எனவே, யாரும் பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை.
தற்போது பரவி வருவது ஓமிக்ரானின் வகையை சேர்ந்த உருமாற்ற வைரஸ் ஆகும். முககவசம், சமூக இடைவெளி கொரோனா விதிமுறைகள் என்பது ஏற்கனவே நடைமுறையில் தான் உள்ளது. கூட்டங்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் பாதுகாப்புக்காக முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற விதிமுறைகளை கடைபிடித்தால் நல்லது என்றும் மா.சுப்ரமணியன் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications