பாஜக மாநில நிர்வாகியை தட்டித் தூக்கிய திமுக.. தேமுதிக கூடாரமே காலி.. மொத்தமா கிளம்பிட்டாங்களே!
சென்னை : தமிழக அரசியலில் நாள்தோறும் பரபரப்பான சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒரு கட்சியில் இருப்பவர்கள் மாற்றுக் கட்சிகளுக்குத் தாவும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், பாஜக மாநில செயலாளர் தீனா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிகவினர் கூண்டோடு திமுகவிற்கு தாவியுள்ளனர்.
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் ஒருவரை தங்கள் கட்சிக்கு கொண்டு வர பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படும் நிலையில், பாஜகவில் இருந்து மாநில நிர்வாகி உள்ளிட்ட பிரமுகர்களை கட்சிக்குள் இழுத்துள்ளது திமுக.
பாஜக மட்டுமல்லாமல், அதிமுக, தேமுதிக, பாமக, ஆகிய கட்சிகளைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்துள்ளனர்.
மொத்தமே 4 பேர்தான் கூட இருக்காங்க.. பேசாம ஓபிஎஸ் தனிக் கட்சி தொடங்கலாம்.. ஜெயக்குமார் கிண்டல்
கட்சி தாவல்
ஒவ்வொரு அரசியல் கட்சியும், தாங்கள் பலம் பெறுவதற்காக மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை கொத்துக் கொத்தாக இழுத்து வருகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் மோதல் தொடங்கியபோது, ஓபிஎஸ் அணியில் இருந்த ஏராளமானோர் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவினர். ஆறு மாதங்களுக்கும் மேலாக அதிமுகவில் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் திமுக பக்கம் தாவியுள்ளனர். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆறுகுட்டி, கோவை செல்வராஜ் உள்ளிட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
மாற்றுக் கட்சிகளுக்கு தூண்டில்
2024 தேர்தலைக் குறிவைத்து தீவிரமாகச் செயல்பட்டு வரும் கட்சிகள், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு வலை வீசுவதையும், பிரதான திட்டங்களில் ஒன்றாக வைத்துள்ளன. ஒவ்வொரு கட்சியிலும் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு தூண்டில்கள் வீசப்பட்டு வருகின்றன. பாஜகவில் மாநில பொறுப்புகள் தருவதாகக் கூறி, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் வலைவீசப்படுவதாகக் கூறப்படுகிறது. அந்தவகையில், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவர் தற்போது திமுகவில் இருக்கும் நிலையில், அவருக்கு பாஜக தூண்டில் போட்டு வருகிறது. அவர் கட்சி மாறவில்லை எனச் சொன்னாலும், பேச்சுவார்த்தைகள் தொடர்கிறதாம்.
பாஜக மாநில நிர்வாகி
இந்நிலையில், பாஜக மாநில செயலாளர் சி.கே.தீனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை தம் பக்கம் இழுத்துள்ளது திமுக. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பா.ஜ.க மாநிலச் செயலாளர் சி.கே.தீனா மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.திவ்யா மகேந்திரன் ஆகியோர் தலைமையில் பா.ஜ.க மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் தி.மு.கவில் இணைந்தனர்.
பாஜகவில் இருந்து விலகி
பா.ஜ.க மாநிலச் செயலாளர் சி.கே.தீனா மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.திவ்யா மகேந்திரன் ஆகியோர் தலைமையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த மாவட்ட துணைத் தலைவர் சிவராமன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எம்.முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மகேந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் ஹேசான், அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.மாரியப்பன், பர்கூர் ஒன்றிய இளைஞர் அணி துணைத்தலைவர் என்.பாலாஜி, ஊத்தங்கரை விவசாய அணி ஒன்றியச் செயலாளர் சிவாஜி, காவேரிப்பட்டிணம் ஒன்றிய ஓ.பி.சி அணி செயலாளர் எஸ்.செந்தில்குமார், கிருஷ்ணகிரி நகர மாணவர் அணித் தலைவர் கே.எம்.தினேஷன் ஆகியோர் பா.ஜ.கவிலிருந்து விலகி தி.மு.கவில் இணைந்தனர்.
அதிமுக - பாஜக - பாமக
மேலும், அதிமுக, தேமுதிக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், தேமுதிக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பி.டி.அன்பரசன், பாஜக மாநிலச் செயலாளர் சி.கே.தீனா, அதிமுக கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவர் அணி பொருளாளர் திருவளவன் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்தனர்.
அதிமுக நிர்வாகிகள்
அதிமுகவைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவர் அணி பொருளாளரும் ஒன்றிய முன்னாள் செயலாளருமான திருவளவன், மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளரும், பொதுக்குழு முன்னாள் உறுப்பினருமான ஏ.சி.ஜெகதீசன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். மத்தூர் வடக்கு ஒன்றிய பாமக கட்சியின் வன்னியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ஏ.எம்.முருகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், தங்கள் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அ.ம.மு.க.வை சேர்ந்த கிருஷ்ணகிரி நகரத்தைச் சேர்ந்த நகர இளைஞர் அணிச் செயலாளர் ஆர்.சுரேஷ் இணைந்தார்.
கூண்டோடு தாவிய தேமுதிகவினர்
மேலும், தேமுதிக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பி.டி.அன்பரசன் தலைமையில் மாவட்ட ஒன்றிய, நகர-பேரூர் நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் என 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.கவில் இணைந்தனர். மாவட்ட செயலாளர் தலைமையில் பலரும் திமுகவில் இணைந்துள்ளதால், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிகவே கூண்டோடு காலியாகியுள்ளது.
அமைச்சர்கள்
மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, அமைச்சர்கள் ஆர்.காந்தி, எ.வ.வேலு, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை நிலைய அலுவலக செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் டேம் வெங்கடேசன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் டி.ஏ.நாகராஜ், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.