மதுரை ஆடியோ! மூச்சு முட்ட முட்டுக் கொடுத்த எச்.ராஜா! போட்டுடைத்த அண்ணாமலை! என்னங்க இப்படி ஆயிருச்சு?
சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் ஆகிய இருவரும் தொலைபேசியில் பேசியதாக வெளியான ஆடியோ பொய்யானது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியிருந்த நிலையில், அது உண்மை தான் என அண்ணாமலை கூறியிருப்பது பாஜகவுக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை விமான நிலையத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் மறைந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த வந்த போது பாஜகவினருக்கும் நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பாஜகவினர் அரசு நிகழ்ச்சிக்கு இவர்கள் ஏன் கூட்டமாக வந்தனர்? என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், அமைச்சருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நான் தான் பேசினேன்.. இனியும் பேசுவேன் 'முழு ஆடியோவை போடுங்க திமுக நண்பர்களே..' - அண்ணாமலை விளக்கம்!
காலணி வீச்சு
இதைத்தொடர்ந்து அங்கிருந்து பாஜகவினரை வெளியேற்ற உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அப்போது பாஜகவினர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, திரும்பிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் அன்று இரவு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.
அண்ணாமலை ஆடியோ
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் ஆகிய இருவரும் தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த ஆடியோ தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அண்ணாமலை இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், மன்னிப்பு கேட்க வேண்டும் என சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன.
ஆடியோ போலியானது?
இந்நிலையில் அந்த ஆடியோ போலியானது , அது யார் குரல் என்பதே இனிமேல் தான் ஐடி வீங்கில் கொடுத்து செக் பண்ண வேண்டும். இந்த ஆடியோ போலியானது என்பது மட்டும் உண்மை என பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் புகார் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் இயங்கும் சைபர் கிரைம் அலுவலகத்திலும் இது தொடர்பாக சுசீந்திரன் புகார் கொடுத்திருக்கிறார்.
எச்.ராஜா
இதனிடையே இவ்விவகாரத்தில் பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கடுமையான கொந்தளிப்பை வெளிப்படுத்தி இருந்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து கேள்வி எழுப்பும் போதெல்லாம் மிக ஆவேசமான அவர், செய்தியாளர்களை மிகக் கடுமையாக விமர்சிப்பது, ஒருமையில் பேசுவது என இருந்தார். இதுதொடர்பாக நேற்று பேசிய அவர்,"மதுரை மாவட்ட தலைவர் அந்த ஆடியோ போலியானது. அதில் உள்ளது எனது குரல் அல்ல என்று சொல்லி இருக்கிறார். காவல்துறையிலும் புகார் கொடுத்திருக்கிறார்.
புதுசா வந்தவன்
அத்தோடு முடிந்து போச்சுல்ல. அப்புறமும் எதுக்கு அண்ணாமலை ஆடியோன்னு நோண்டுறீங்க அப்புறம் மீறியும் அதேயே கேட்டா தப்பா போகும்..நான் உங்க வீட்டுல யாரையாவது பேசினா எப்படி இருக்கும்? என் கட்சி என் வீடு. பேசக்கூடாது. மிமிக்ரி பண்ணி வெளியிட்டிருக்கான். இதை போய் ஸ்டாலின்கிட்ட கேட்கணும்? உங்க கட்சியில புதுசா வந்தவன் இப்படி மிமிக்ரி ஆடியோ வெளியிட்டிருக்கானே என்று கேளுங்க என்று சீறினார்.,
அண்ணாமலை ஒப்புதல்
இந்நிலையில் அந்த ஆடியோ தன்னுடையது தான் என பாஜக அண்ணாமலை கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள அவர்,"நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசியது தவறு தான். இது குறித்து நான் மதுரை புறநகர் நிர்வாகி உடன் பேசி இருந்தேன். அதில் ஒரு சில வார்த்தைகளை நீக்கியும் சேர்த்தும் திமுகவினர் வெளியிட்டுள்ளனர். நான் பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோ உண்மைதான். அதில் திமுகவினர் ஒரு சில வார்த்தைகளை நீக்கியும் சேர்த்தும் வெளியிட்டுள்ளனர். அந்த ஆடியோவை முழுவதுமாக வெளியிட வேண்டும்" என கூறியிருக்கிறார்.
பாஜகவுக்குள் குழப்பம்
இந்த நிலையில் இந்த விவகாரம் பாஜகவுக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தான் அவ்வாறு பேசவே இல்லை என மதுரை மாவட்ட பாஜக தலைவரான சுசீந்திரன் கூறியிருந்தார். மேலும் செய்தியாளர்களை ஒருமையில்பேசியதோடு, மிமிக்கிரி செய்யப்பட்டதாக எச்.ராஜா கடும் கோபமாக பேசினார். அதே நேரத்தில் அந்த ஆடியோ தன்னுடையது தான் என அண்ணாமலை கூறி இருக்கிறார். அண்ணாமலை கூறியது உண்மை என்றால் எச். ராஜா பேசியது பொய்யாக இருக்க வேண்டும். எச்.ராஜா பேசியது உண்மையாக இருந்தால் அண்ணாமலை பேசியது பொய்யாக இருக்க வேண்டும். உண்மையில் எது தான் நடந்தது என பாஜகவினர் விளக்கம் அளிக்க வேண்டும் என சமூக வலைதளங்களை நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.