"மத்தள" நிலையில் அண்ணாமலை! அதுபோன மாசம்.. இது இந்த மாசம்! 2 பக்கம் இடிக்கும் ஓபிஎஸ்,ஈபிஎஸ் தரப்பினர்
“உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்பதை போல்” மாறியுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் நிலை.
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் அண்ணாமலையை விமர்சித்து வரும் நிலையில், கடந்த மாதம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டார் அண்ணாமலை.
"உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்பதை போல்" மாறியுள்ளது அண்ணாமலையின் நிலை. கடந்த வாரம் பாஜக ஐடி விங் மாநில தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அவர் அதிமுகவில் இணைவதாக அறிவித்தார். அடுத்தடுத்த நாட்களில் பாஜகவை சேர்ந்த பல்வேறு பிரிவுகளின் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை மீது அடுத்தடுத்து குற்றச்சாடுகளை சுமத்தி கட்சியில் இருந்து விலகினர்.

அதிமுகவில் இணைந்த பாஜகவினர்
அவர்களும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பாஜக மாநில விளையாட்டு மற்ரும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவரான அமர்பிரசாத் ரெட்டி, "அதிமுக கூட்டணியில் இருக்கும்போது இப்படி செய்திருக்க கூடாது. பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுக அரவணைக்க கூடாது. தமிழ்நாட்டின் வருங்காலம் பாஜகதான்.

பாஜக கண்டனம்
அண்ணாமலை தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார். அடுத்த பதிவில் "கட்சிக்கே பிரச்னை என்றதும், 'காட்சி கொடுங்கள் ஐயா' என்று ஓடோடி வந்தவர்களெல்லாம் இன்று, அகில உலக தலைவர்களாக காட்டிக் கொள்ள விழைகின்றனர். உதவி செய்தவர்களை துச்சமாக மதிப்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த அரசியல் என்றால், அந்த அரசியல் எங்களுக்கு ஒரு நாளும் வேண்டாம்!" என்று விமர்சித்தார்.

அதிமுக பாஜக கருத்து மோதல்
இதுகுறித்து அண்ணாமலை அளித்த பேட்டியில், அவர் தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டதாக கூறி செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் கேபி முனுசாமி பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று அறிவித்ததை அடுத்து இரு தரப்பு மோதல் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

செங்கோட்டையன், கடம்பூர் ராஜு
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பாஜக கூட்டணியால் ஈரோடு கிழக்கில் சிறுபான்மையினர் வாக்குகள் விழவில்லை என்று தெரிவித்தது மீண்டும் பிளவுக்கு வழிவகுத்தது. அதன் தொடர்ச்சியாக
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் அண்ணாமலையை பொதுக்கூட்டத்தில் ஒருமையில் விமர்சித்ததாக கூறி அவரை, கத்துக்குட்டி என்று சாடினார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன்.

தொடரும் மோதல்
இப்படி எடப்பாடி தரப்புக்கும் தமிழ்நாடு பாஜகவுக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் அண்ணாமலையை ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் கடுமையாக சாடி அவருக்கு எதிராக தீர்மானமே போட்டனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சமயத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணாமலை அவமதித்துவிட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினார்கள்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
கடந்த பிப்ரவரி மாதம் சிவகங்கையில் நடைபெற்ற ஓபிஎஸ் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில், அண்ணாமலைக்கு எதிராகவே அவர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை அவமதிப்பதாக அவர்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

சிவகங்கையில் கண்டன தீர்மானம்
அதிமுக - பாஜக இடையிலான உறவில் அண்ணாமலை விஷம் கலப்பதாக குற்றம்சாட்டிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்கு முன் எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அண்ணாமலை திரும்பப்பெற கோரியதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

எடப்பாடிக்கு ஆதரவு என புகார்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரிப்பதாக வெளியிட்ட அறிக்கையில், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அவர் குறிப்பிட்டற்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications