பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகி நீக்கம்.. அதிரடி காட்டிய அண்ணாமலை! கடும் சண்டையால் ஆக்ஷன்!
சென்னை : கள்ளக்குறிச்சி பாஜக மாவட்ட துணைத் தலைவரை கட்சியிலிருந்து நீக்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். சங்கராபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின்போது இரு தரப்பினர் கடுமையாக மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடந்த 6ஆம் தேதி பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரத்தின் ஆதரவாளர் ரவி மற்றும் புதிய மாவட்ட தலைவர் அருள் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் ஒருவரை ஒருவர் நாற்காலிகளை வீசி கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் பரவியது.
10 ஆண்டுகளில் புதிய கல்விக் கொள்கை.. ஆட்சியாளர்கள் எதிர்த்தாலும் நடைமுறைக்கு வரும்.. அண்ணாமலை பேச்சு
பாஜகவினர் மோதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி பாஜக மாவட்ட தலைவர் அருள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரத்தின் ஆதரவாளரான ஆரூர் ரவி உள்ளிட்டோர் வந்திருந்தனர். அப்போது பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரம் ஆதரவாளர்கள் அவர் நியமித்த பல்வேறு நிர்வாகிகளை புதிய தலைவர் அருள் மாற்றியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோஷ்டி மோதல்
இதனை அடுத்து இருதரப்பு ஆதரவாளர்களிடையே இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி இருதரப்பினரும் மாறி மாறி நாற்காலிகளை வீசி மோதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் இரு தரப்பினரும் காயமடைந்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு போர்க்களம் போல் காட்சியளித்தது. பாஜகவில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
கட்சியில் இருந்து நீக்கம்
இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி அறிந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கோபத்தில் இருப்பதாகவும், இரு தரப்பினரையும் கண்டித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், கட்சியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக துணை தலைவர் ஆரூர் ரவி நீக்கப்பட்டுள்ளார். பாஜகவில் நிகழ்ந்த கடும் மோதல் சலசலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை அதிரடி
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட துணைத் தலைவர் ஆரூர் ரவி கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.