அத்தனை போலீசுக்கும் தெரியாமல் அண்ணாமலை கைக்கு துப்பாக்கி எப்படி வந்தது.. சென்னையில் பரபரப்பு
சென்னை: பெரம்பூர் அருகே அகரம் சந்திப்பில் 'என் மண் என் மக்கள்' நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் அண்ணாமலை கையில் துப்பாக்கியோடு நின்ற சம்பவம் அதிர்ச்சி அளித்தது.
பாஜக தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" யாத்திரை நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை இந்த யாத்திரை அடைந்துள்ளது. தற்போது பெரம்பூரில் இந்த யாத்திரை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

இந்த நிகழ்வில் பேசிய அண்ணாமலை, பிரதமரின் பத்தாண்டு கால நல்லாட்சியின் அச்சாணியாக விளங்குபவர்கள் பெண்களே. மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களும், மகளிரை மையப்படுத்தியே கொண்டு வரப்படுகின்றன. எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த நமது பாரதப் பிரதமர் மோடி தனது தாயிடம் கற்றுக் கொண்ட பாடங்களாக, சுத்தமான, நாகரிகமான உடை, நேரம் தவறாமை ஆகியவற்றைக் குறிப்பிடுவார்
குஜராத் முதல்வராக 14 ஆண்டுகள், பாரதப் பிரதமராக 10 ஆண்டுகள் என 24 ஆண்டுகளில், நமது பிரதமரின் தாயார் ஹீராபென் அம்மையார் அவர்கள், 1990களில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையின்போது, காஷ்மீர் தீவிரவாதிகள் அச்சுறுத்தலுக்குப் பயப்படாமல், காஷ்மீரில் தேசியக் கொடியேற்றிவிட்டு, குஜராத் திரும்பிய போதும், பிரதமர் மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்த போது, தமது ஆசிரியப் பெருமக்களுக்கு மரியாதை செய்த நிகழ்வு ஆகிய இரண்டு முறை மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

நமது பிரதமர் அவர்களின் முழு கவனமும் நாட்டின் மீதுதான் இருக்க வேண்டும் என்பதற்காக, பிரதமரின் டெல்லி அதிகாரப் பூர்வ இல்லத்தில் தங்காமல், தனது இறுதிக் காலம் வரை குஜராத்திலேயே தங்கியிருந்த தன்னலமற்ற தாய் ஹீராபென் அம்மையார் பெற்றெடுத்த தவப் புதல்வன் இன்று நமது நாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார், என்று குறிப்பிட்டார்.
அண்ணாமலை துப்பாக்கி: பெரம்பூர் அகரம் சந்திப்பில் இந்த ' என் மண் என் மக்கள்' நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் அண்ணாமலை கையில் துப்பாக்கியோடு நின்ற சம்பவம் அதிர்ச்சி அளித்தது.
அண்ணாமலை நிகழ்ச்சி முடிந்து கீழே இறங்கும்போது, அவருக்கு பாஜவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெரிய துப்பாக்கி ஒன்றை பரிசாக வழங்கினார். அதனை அண்ணாமலை மேலே தூக்கி காண்பித்து ஆரவாரம் செய்தார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. போலீசார் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு துப்பாக்கி எப்படி வந்தது என தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இறுதியில் அது ஏர் கன் எனப்படும் டம்மி துப்பாக்கி என்பது தெரிய வந்தது.
அண்ணாமலை என்ன சொன்னார்: இந்த நிகழ்வில் பேசிய அண்ணாமலை, பிரதமர் மோடி அரசில், பெண் குழந்தைகள் நமது நாட்டின் சொத்துக்கள் என்று பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்தவுடன் அவர்கள் வங்கிக் கணக்குக்கு ரூ.1,000, ஆறாவது மாதம் ரூ.2,000, குழந்தை பிறந்தவுடன் ரூ.2,000 என கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு வரை, 64% வீடுகளில் மட்டுமே சமையல் எரிவாயு இணைப்பு இருந்தது. சமையல் செய்யும் தாய்மார்கள் குறித்த சிந்தனை, அதற்கு முன்பாக பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. தற்போது, உஜ்வாலா திட்டத்தின் மூலம் 100% வீடுகளில் புகையில்லா சமையலுக்காக, ரூ.300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் அமைக்கப்பட்டு, நம் தாய்மார்கள், சகோதர சகோதரிகளின் கண்ணியத்தைக் காத்திருக்கிறார் நமது பிரதமர். தமிழகத்தில் மட்டும் 55 லட்சம் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன
சுதந்திரம் கிடைத்து 67 ஆண்டுகளாக, இந்தியாவில் பெண்களின் பெயரில் 3% மட்டுமே அசையாச் சொத்து இருந்து வந்தது. நமது மாண்புமிகு பிரதமர் மோடி ஆட்சியில்தான், பிரதமரின் வீடு திட்டத்தில் வழங்கப்படும் வீடுகள் 95% குடும்பத் தலைவிகள் பெயரிலேயே வழங்கப்படுகின்றன. எளிய குடும்பத்தில் இருந்து வந்த நமது பிரதமர், சிறு வயதில் தன் குடும்பத்தினருக்குக் கிடைக்காத அடிப்படை வசதிகள் அனைத்தும், இன்று நாட்டிலுள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார், என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications