"காவி" குஷ்புவின் தில்.. ஒரே ட்வீட்டில் டேமேஜ்.. ஜெர்க் ஆன பாஜக.. மலைக்கும் திராவிட கட்சிகள்.. ஏன்?
பெரியார் சிலை அவமானம் குறித்து குஷ்பு கண்டன ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், கோழைகள்தான் இதை செய்கிறார்கள் என்றும் பாஜக பிரமுகரான குஷ்பு பதிவிட்டுள்ள ட்வீட், தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது..!
பெரியாருக்கு முன்னும் பின்னும் நிறைய தலைவர்கள் தமிழகத்தில் பிறந்தார்கள்.. இறந்தார்கள்... ஆனால் மதவாத சக்திகள் கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் பெரியாரின் சிலைகளாகவே இருந்து வருகின்றன.
இன்னும் இவர்கள் பெரியாரையே எதிர்த்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம், பெரியாரின் கருத்தியல் வேர் பிடித்து தமிழகத்தில் ஆழமாக நிற்கிறது என்பதுதான்.
ஸ்டாலின் நல்லாயிருக்கணும்.. அவருக்கு ஒரு பிரச்னைன்னா சும்மாயிருக்க மாட்டோம்.. குஷ்பு பரபரப்பு பேச்சு
நாத்திகர்கள்
பெரியார் இங்கு இல்லையென்றால், அவர் சிலை மீதே காவி சாயம் பூசும் உரிமைகூட பூசியவர்களுக்குக் கிடைத்திருக்காது என்பதே நிதர்சன உண்மை.. ஆத்திகர்களைவிட நாத்திகர்கள்தான் கடவுளை பற்றியே அதிகம் பேசுவார்கள், சிந்திப்பார்கள் என்று சொல்வார்கள். அந்த வகையில், பெரியாரின் ஆதரவாளர்களைவிட எதிர்ப்பாளர்கள்தான் பெரியாரைப் பற்றி அதிகம் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்... இப்படிப்பட்ட செயல்களை அடிக்கடி செய்து, மறந்து போன பெரியாரையும் நம் மக்களுக்கு நினைவு படுத்தி கொண்டேயும் இருக்கிறார்கள்,
இந்துத்துவா
அப்படித்தான், நேற்றைய தினம் சம்பவம் நடந்துள்ளது.. தமிழகத்தில் எந்த ஒரு பிரச்சனை தலைதூக்கினாலும், அதில் இருந்து திசை திருப்ப இந்துத்துவா கையாளும் ஆயுதம்தான் பெரியார் சிலை விவகாரம்... பிரச்சனைகளை களைய முடியாதவர்கள், அதனை பூசி மொழுகி, குறுக்கு வழியில் இதுபோன்ற யுக்திகளை கையாள்வது தொடர்ந்து நடந்தும் வருகிறது.. அதுதான் இப்போதும் நடந்துள்ளது..
செருப்பு மாலை
கோவை வெள்ளலூர் பகுதியில் தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகத்தின் முன்பாக பெரியார் சிலை உள்ளது... இந்த சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை போட்டு, காவி பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர்... அந்த வழியாக சென்ற பொதுமக்கள், பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அங்குள்ள பெரியார் படிப்பக நிர்வாகிகளுக்கு தகவல் தெரித்துள்ளனர்.. இந்த சம்பவம் தமிழக அரசியல் கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.. பல்வேறு தலைவர்கள் இதற்கு கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.. அந்த வகையில் பாஜகவின் குஷ்புவும் நடந்த சம்பவத்தை ட்வீட் போட்டு கண்டித்துள்ளார்.
பெரியார் சிலை
"கோயம்புத்தூரில் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.. இது ஒரு அவமரியாதை செயலின் தெளிவான அறிகுறி.. கோழைகள்தான் இப்படில்லாம் செய்கிறார்கள்... தந்தை பெரியார் பலராலும் போற்றப்படுகிறார்.. அவரை நாம் மதிக்க வேண்டும்.. ஆனால கோயம்புத்தூரில் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்... இந்த வெட்கக்கேடான செயலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்... பெரியார் சிலைக்கு ஆரஞ்சு வண்ணம் தீட்டுவது ஒரு அவமரியாதை செயலின் தெளிவான அறிகுறியாகும்" என்று பதிவிட்டுள்ளார்.
லெனின் சிலை
குஷ்பு எப்போதுமே எந்த கருத்தையும் வெளிப்படையாகவே சொல்பவர்.. அவர் காங்கிரஸில் இருந்தபோதுகூட, ராகுல் மீதே பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டியவரும் கூட... யாருக்கும் எதற்காகவும் பயப்படாதவர்.. அவர் காங்கிரஸில் இருந்தபோதுகூட ஒரு சம்பவம் இப்படித்தான் நடந்தது.. பாஜக கட்சி வெற்றிபெற்ற பின் திரிபுராவில் லெனின் சிலை அப்போது அகற்றப்பட்டது.. இந்த சம்பவம் இந்தியா முழுக்க சர்ச்சையை உருவாக்கி கொண்டிருந்தது.. இந்த சர்ச்சை அடங்கும் முன்பே எச்.ராஜா ஒரு பதிவு போட்டிருந்தார்..
லெனின் சிலை
அதில், "லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.. எச்.ராஜா இப்படி போட்டதுமே கடுமையான எதிர்ப்புகள் நாலாபக்கமும் வந்தது.. உடனடியாக இந்த ட்வீட்டை எச்.ராஜா நீக்கிவிட்டாலும், அப்போது குஷ்புவும் எச்.ராஜாவை வெளிப்படையாகவே கண்டித்திருந்தார்.. "என்னையும் என்னை போன்ற பலரையும் தாண்டி செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்பதை பார்க்கிறேன். உங்கள் நிழல் கூட பெரியார் சிலையை தொட முடியாது என்று பதிவிட்டிருந்தார்.. குஷ்பு காங்கிரஸில் இருந்ததால் பெரியாருக்காக இவ்வாறு பேசினார் என்று கருதப்பட்டது..
Recommended Video
பாஜக
ஆனால், இப்போது அவர் பாஜகவின் தேசிய செயற்குழு - சிறப்பு அழைப்பாளராக இருந்தாலும் சரி, பெரியாருக்கு ஒரு இழுக்கு என்றால், குஷ்பு தன் ஆதங்கத்தை மறக்காமல் தெரிவிப்பது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.. மணியம்மையாக இவர் ஒரு படத்தில் நடித்தவர் என்பது ஒருபக்கம் இருந்தாலும், திராவிட சித்தாந்தத்தை பற்றி குஷ்பு அறிந்து வைத்துள்ளதும், தொடர்ந்து தன்னுடைய துணிச்சலில் உறுதியாக இருப்பதும், பெரியாருக்கு ஒரு இழுக்கு என்றால் அதற்காக கொந்தளித்து கண்டிப்பதும், மகிழ்ச்சிக்குரிய செயலாகும் என்பது மட்டுமல்ல, இதை பாஜகவும் கவனிக்கவே செய்யும் என்பதையும் மறுப்பதற்கில்லை!