வீடியோ வாக்குமூலம் தெளிவாக உள்ளது போலீசுக்கு வேறு என்ன தேவை? அரியலூர் மாணவி தற்கொலை- அண்ணாமலை கேள்வி
சென்னை: அரியலூர் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
அரியலூர் வடுகர் பாளையத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்துவ பள்ளியில் +2 படித்து வந்தார்.
இவர் பள்ளி அருகே உள்ள விடுதி ஒன்றில் தங்கிப் படித்து வந்தார். கடந்த ஜன. 9ஆம் தேதி அந்த மாணவி விடுதியில் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் இயங்குவோருக்கு கண்ணியம் முக்கியம்.. கவிஞர் வைரமுத்து அறிவுரை
+2 மாணவி
இதையடுத்து மாணவியைச் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் வயிற்றில் வலி தொடரவே, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது தான் அந்த மாணவி தான் பூச்சி மருந்தை சாப்பிட்டதாக கூறியுள்ளார். அவரது கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கவே, அந்த மாணவி தஞ்சை அரசு மருத்துவமனையில் ஜனவரி 15ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.
உயிரிழப்பு
இதற்கிடையே சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை மதமாறும்படி பள்ளியில் கட்டாயப்படுத்தியதாகவும் அதற்குத் தான் ஒத்து கொள்ளாததால் தன்னிடம் அதிக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாக அந்த மாணவி பேசும் வீடியோ இணையத்தில் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஜன. 16இல் அந்த மாணவி தஞ்சை நீதிமன்ற நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார். இது தொடர்பாக விடுதி நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்த நிலையில், ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி ஜனவரி 19இல் உயிரிழந்தார்.
எஸ்பி விளக்கம்
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக சார்பில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த மாணவியின் பெற்றோரும் உடலை வாங்க மறுத்து வருகின்றனர். இந்தச் சூழலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி ரவளி பிரியா, மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மதமாற்றப் பிரச்சினை ஏதும் இல்லை எனத் தெரிவித்திருந்தார். இது பாஜகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை சாடல்
இது தொடர்பாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "மாணவி அளித்த வீடியோ வாக்குமூலம் தெளிவாக உள்ளது. அந்த வீடியோ ஆதாரம் போலியானது என்று எஸ்பி முடிவுக்கு வந்துள்ளாரா? அதை எப்படி உறுதி செய்தார். மாணவியின் பெற்றோர், உறவினர்கள் எல்லோரும் தெளிவாக வாக்குமூலம் அளித்தார்கள். அவர்கள் எல்லோரையும் பொய்யர்கள் என்று எஸ்பி கூறுகிறாரா? இதைத் தாண்டி போலீசாருக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
நாராயணன் திருப்பதி
அதேபோல பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறுகையில், "மாணவியின் பெற்றோரின், உறவினர்களின் பேட்டியை இன்று கேட்ட பின்பும் மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை என்று கூறுவாரா தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர்? நேற்று சொன்னதை இன்று திரும்பப் பெறுவாரா? அல்லது உண்மை குற்றவாளிகளைக் கைது செய்வாரா? மேலும் அப்பாவி குழந்தைகள் பலியாவதைத் தடுப்பாரா? அப்பாவி சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.