சொன்னீங்களே.. இப்பவும் கறுப்பு பணம் எப்படி உலவுது? “இதோ இப்படித்தான்”- கனிமொழி கேள்விக்கு பாஜக பதில்
சென்னை : தி.மு.க எம்.பி கனிமொழி, கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கு முதல் முயற்சியாக, மது ஆலை மற்றும் டாஸ்மாக்கில் நடக்கும் ஊழலை ஒழிக்க புறப்படட்டும் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் என இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்படும் சூழல் மாறி, தற்போது இரு அவைகளும் விவாதங்களுக்குத் திரும்பியுள்ளன.
இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்பு பணம் ஒழிந்து விடும் என பாஜக கூறியது, ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் கறுப்பு பணம் புழங்கி வருவது எப்படி? என திமுக எம்.பி கனிமொழி லோக்சபாவில் கேள்வி எழுப்பினார்.
கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதில் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பார்லிமெண்ட்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள் முதலே அக்னிபாத், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும் நிலை உருவானது. இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவர் குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், கடந்த இரு வாரங்களாக முடங்கிய நாடாளுமன்றம் மீண்டும் விவாதங்கள், கோரிக்கைகள் எனச் செயல்படத் தொடங்கியுள்ளது.

கறுப்பு பணம் புழங்குவது எப்படி?
இதையடுத்து நேற்று முன்தினம் நாடாளுமன்ற லோக்சபாவில் பேசிய திமுகவின் கனிமொழி எம்.பி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கறுப்புப் பணம் ஒழிந்துவிடும் என மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் கறுப்பு பணம் புழங்கி வருவது எப்படி? இதுநாள் வரை கறுப்பு பணம் ஒழிக்கப்படவே இல்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 50,000 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது தான் மிச்சம் எனப் பேசினார்.

திராவிட ஆட்சியால் தான்
கனிமொழியின் கேள்விக்கு பா.ஜ.க தமிழக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை விடுத்துள்ளார். பாஜக நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில், "பண மதிப்பிழப்பை அமல்படுத்திய பின், கறுப்பு பணமே இல்லாமல் ஆகிவிடும் என அறிவித்தனர். அதன்பிறகும் நாட்டில் கறுப்பு பணம் எப்படி உலவுகிறது என தி.மு.க எம்.பி கனிமொழி, பார்லிமென்ட்டில் கேள்வி எழுப்பியுள்ளார். 'எங்கும் ஊழல், எதிலும் ஊழல்' என்ற திராவிட மாடல் ஆட்சியால் தான் கறுப்பு பணம் உலவுகிறது.
Recommended Video

இதுவே கறுப்புப் பணம்
தமிழகத்தில், டாஸ்மாக் கடைகளில் விற்கும், ஒவ்வொரு பாட்டிலுக்கும், 10 முதல் 20 ரூபாய் கூடுதலாக, குடிமகன்களிடம் இருந்து பெறப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு கோடி பாட்டில்கள் விற்பனையாகின்றன. அதன்படி ஒரு நாளைக்கு 'குடி'மகன்களிடம் இருந்து, 15 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆண்டுக்கு, 5,400 கோடி ரூபாய். இதுவே கறுப்பு பணம்.

கணக்கில் வராத வர்த்தகம்
மேலும், பயன்படுத்திய பாட்டில்கள் வழியே பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் உலவுகிறது. தமிழக நிதி அமைச்சர் மார்ச் மாதத்தில் கூறியபடி, 50 சதவீதம் மது விற்பனை, கலால் வரி இல்லாமல் நடக்கிறது என்றால், 33 ஆயிரம் கோடி வருவாய் கணக்கில் வராமல் பதுக்கப்படுகிறது. அப்படியானால், மதுபான நிறுவனங்கள் பல லட்சம் கோடி ரூபாய்க்கு கணக்கில் வராத வர்த்தகத்தை மேற்கொண்டு உள்ளனர்.

கலால் வரி செலுத்தப்படுமா?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தி.மு.கவினர் நடத்தும் மது ஆலைகளை மூடிவிடுவோம் என கனிமொழி கூறினார். அதன்படி செய்யாவிட்டாலும், குறைந்தது அந்த ஆலைகளை, கலால் வரி செலுத்தி, அரசுக்கு வருவாயை பெருக்க சொல்வாரா? இதுவே, நாட்டில் கறுப்பு பணம் எப்படி உலவுகிறது என கனிமொழி கேட்ட கேள்விக்கு பா.ஜ.க அளிக்கும் பதில்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications