ஆவடியில் அர்ஜுன் பீரங்கி தயாரிப்பு.. அண்ணாமலை வரவேற்பு.. பிரதமர் மோடிக்கு நன்றி
சென்னை: சென்னை அடுத்த ஆவடி பீரங்கி தயாரிப்பு தொழிற்சாலையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், 118 அர்ஜூன் ரக பீரங்கிகள் தயாரிப்பதற்கு 7523 கோடி ரூபாய்க்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வரிசையாக அவர் ட்வீட் பதிவுகளை வெளியிட்டுள்ளார். இதோ அவர் கூறுவதை பாருங்கள்:
சூப்பர்.. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட.. இலகுரக பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி.. ஒடிசாவில்!
அண்ணாமலை வரவேற்பு
"மேக் இன் இந்தியா" இந்திய முன்னேற்றத்தின் ஆதாரமான வார்த்தைகள். ராணுவத்தின் தேவைக்கு சென்னை ஆவடி டேங்க் தொழிற்சாலைக்கு அர்ஜுன் ரக டேங்குகள் தயாரிக்க 7523கோடி ரூபாய்க்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி துறைக்கு வாய்ப்பு
"இந்தியாவில் தயாரிப்போம்" திட்டமானது நம் நாட்டின் அந்நியச் செலாவணியை குறைப்பது மட்டுமில்லாமல் உள்நாட்டு உற்பத்தி துறைகளுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. இதன் மூலம் பல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
நன்றி
வரும் காலங்களில் ராணுவ தளவாடங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா நிச்சயம் மாறும். தொலை நோக்கம் கொண்ட தலைவர் நரேந்திர மோடி அவர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் தமிழக மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள். இவ்வாறு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேக் இன் இந்தியா
2014ம் ஆண்டு, முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவிக்கு வந்த பிறகு, மேக் இன் இந்தியா என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது. சீனா போன்ற நாடுகளில் பெரும்பாலான பொருட்களை தங்கள் நாட்டுக்குள் உற்பத்தி செய்வதால் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி உள்ளன.
அன்னிய செலவாணி
இந்தியா இறக்குமதியை நம்பிக் கொண்டு இருந்தால் அன்னிய செலவாணி கையிருப்பு பற்றாக்குறையில் சென்று நிற்கும். மேலும் நமது வருமானம் பாதிக்கப்படும். அதுவே இந்தியாவில் உள்ள வளங்களை பயன்படுத்தி இந்தியாவிற்குள் பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்தால் அன்னிய செலவாணி பெருகி நமது நாடு பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் என்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
பொருளாதாரம்
குண்டூசி முதல் விமானம் வரை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை நோக்கம் என்ற போதிலும் கூட இந்த திட்டத்தில் எந்த அளவு வெற்றி பெற்றுள்ளோம் எந்த அளவு பொருளாதார வளர்ச்சி பெற்று உள்ளோம் என்பது குறித்த விரிவான புள்ளி விபரம்வெளியிட வேண்டிய தேவை உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.