அதிமுகவின் தனிப்பெரும்பான்மைக்கு.. ஆப்பு வைக்கும் பாஜக பிளான்? 50+ இடங்களை தாங்க.. இப்போதே பேரம்!
சென்னை: அதிமுக கூட்டணியில், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளைப் பெற திட்டமிட்டுள்ளது. அரசியல் வட்டாரங்களில் இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தற்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் தொகுதி பங்கீடு திட்டம்
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில், தற்போது 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்க பாஜக திட்டமிட்டுள்ளது, அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாஜக, அதிமுகவிடம் இப்போதே பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. வரவிருக்கும் தேர்தலில் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம், இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் இந்த விவகாரம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், அரசியல் களத்தில் இந்தக் கூட்டணி தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள் எந்த முடிவுக்கு வரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதிமுக பாஜக கூட்டணி
அதிமுகவிடம் பாஜக எத்தனை தொகுதிகளைக் கேட்கும், எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது தேர்தல் நெருங்கும் போது தெரியவரும். அரசியல் கட்சிகளின் வியூகங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், ஆகியவை தேர்தலின் முடிவுகளை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும். சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளும் விரைவில் ஒருமித்த கருத்துக்கு வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படுவது அவ்வளவு எளிதல்ல. இரு கட்சிகளும் தங்கள் பலம் மற்றும் எதிர்காலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.
பாஜகவின் இந்த முயற்சி அதிமுகவுக்கு எவ்வளவு தூரம் சாதகமாக இருக்கும் அல்லது பாதகமாக இருக்கும் என்பது தேர்தல் முடிவுகளின்போது தெரியவரும். பாஜக இவ்வளவு தொகுதிகளைக் கேட்பது, அதிமுகவின் அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு சவாலாக இருக்குமா? அல்லது இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது வெற்றியைத் தருமா? அரசியல் வல்லுநர்கள் தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
அதிமுக தனித்து ஆட்சி?
ஏற்கனவே அதிமுக தனித்து ஆட்சி என்று கூற கூற.. பாஜக கூட்டணி ஆட்சி என்று அடித்து சொல்லி வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பாக பாஜக கூட்டணியில் உள்ள அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றாலே அனைவருக்கும் தெரியும் 2014, 2019 இல் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போதும் கூட கூட்டணி கட்சிகளை எல்லாம் இணைத்தே அமைச்சரவையை அமைத்தார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றால் அது கூட்டணி அமைச்சரவை தான் என்பது எனது புரிதல்.
முதல்வர் வேட்பாளர் யார் என்று கூட்டணியினர் சேர்ந்து முடிவெடுப்பார்கள். 2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பதிலடி
இந்த நிலையில் தினகரனின் இந்த பேச்சு தொடர்பான கேள்விக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலில், அமித் ஷா சென்னைக்கு வந்த போதே இதை பற்றி தெளிவாக சொல்லிவிட்டார். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. அதோடு இதற்கு நாங்கள்தான் தலைமை தாங்குவோம் என்பதும் உறுதியாகிவிட்டது.
அதோடு இல்லாமல் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமிதான் இருப்பார் துன்று அமித் ஷாவே அறிவித்துவிட்ட்டார். எங்கள் கூட்டணி அதிமுக தலைமையில் அமையும். நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
அதாவது முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் இறுதி முடிவு வந்து டெல்லி எடுக்கிற முடிவுதான்.. அது உங்களுக்கே தெரியும். உங்கள் எல்லோருக்குமே தெரியும்.. டெல்லி இதில் எடுக்கும் முடிவுதான் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியபடிதான்.. அதை தாண்டி யார் பேசினாலும் அது சரியில்லை.. அமைச்சர் பேச்சை தாண்டி யார் என்ன சொன்னாலும் அது சரி கிடையாது என்பதுதான் என் கருத்து, என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
அமித் ஷா சொன்னது என்ன?
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில வாரங்களுக்கு முன் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்றார். அதே சமயம் ஆட்சியில் பங்குபெறுவீர்களா என்ற கேள்விக்கு - ஆம் என்றும் பதில் அளித்தார்.
அதிமுகவின் ஆட்சியில் பாஜக பங்குபெற வேண்டும் என்றால் அதிமுக தனிமெஜாரிட்டி பெறக்கூடாது. அப்படி நடக்க வேண்டும் என்றால் பாஜக கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும். இதை மனதில் வைத்தே பாஜக 50+ இடங்களை கேட்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications